வசிட்டமுனிவன் பரதனுக்கு அரசின் சிறப்பை உரைத்தல்  

2248.‘வேதியர், அருந் தவர், விருத்தர், வேந்தர்கள்
ஆதியர் நின்வயின் அடைந்த காரியம்,
நீதியும் தருமமும் நிறுவ; நீ இது,
கோது அறு குணத்தினாய்! மனத்துக் கோடியால்

    ‘கோதறு குணத்தினாய்!- குற்றமற்ற குணத்தை உடைய (பரதனே)
வனே!;  வேதியர் - அந்தனர்;  அருந்தவர் - அரியதவம் செய்த முனிவர்;
விருத்தர் - (அநுபவத்தால்) முதிர்ந்த பெரியோர்; வேந்தர்கள் - அரசர்கள்;
ஆதியர் - முதலானோர்; நின்வயின் -உன்னிடத்து; அடைந்த காரியம் -
வந்து சேர்ந்த செயல்;  நீதியும் -(மக்களுக்கு நன்மை செய்ய உள்ள) அரச
நீதியையும்;  தருமமும் - (அவரவர் செயலை அவரவர்செய்தற்குத்
தடையிலாத) அரச தர்மத்தையும்; நிறுவ - (அரசன் இல்லாமையால்
சிதையாவண்ணம்)நிலை நிறுத்தவே; நீ-; இது - இச்செயலை; மனத்துக்
கோடி
- மனத்தின் கண்நினைத்துக் கொள்வாயாக.’

     அரச நீதியாவது எளியரை வலியர் வாட்டாது பாதுகாத்தலாகும்.
“மாநிலங்காவலனாவான்மன்னுயிர் காக்கும் காலைத்; தான் அதனுக்கு
இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்; ஊனமிகுபகைத்திறத்தால் கள்வரால்
உயிர்தம்மால், ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான்அல்லனோ?”
என்னும் (பெரிய. திருந. 36) பெரிய புராணச் செய்யுளான் அறிக. அரச
தருமம் -குறைவேண்டுவார்க்கு அது நிரப்புதலாம். முறை வேண்டுநர்க்கும்,
குறை வேண்டுநர்க்கும் அரசன்காட்சிக்கெளியனாய் அது தீர்த்தலையே
(குறள் 386. பரி. உரை) நீதியும் தருமமும் எனஇரண்டாகக் கம்பர்
வசிட்டன் வாக்கால் கூறினார்.                                     5