2249. ‘தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி ஐய! நீ
இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது,
தெருள் மனத்தார் செய்யும் செயல் இது ஆகுமால்.

    ‘ஐய! நீ-;தருமம் என்று ஒரு பொருள் - அறம் என்று சொல்லப்
படுகின்ற ஒப்பற்ற ஒரு பொருளை; தந்து - உலகிற்குத் தந்து (மக்கள்
அனைவரையும் மேற்கொள்ளுமாறு செய்து); நாட்டுதல்-நிலைநிறுத்துதல்;
அருமை என்பது - மிகவும் அருமையான செயல் என்பதனை; பெரிது
அறிதி
- நன்கு அறிவாய்; ஈண்டு - இவ்விடத்தில்;  இது - இவ்வறம்;
இருமையும் -இம்மை,  மறுமை ஆகிய இரண்டையும்; தருவதற்கு -;
இயைவது -
பொருந்தியதாகும்;  இது -இவ்வறம்; தெருள்மனத்தார் -
தெளிவுபெற்ற மனம் உடைய மேலோர்; செயும் செயல்ஆகும் - செய்யும்
செயலாகும்.

     அறத்தின் சிறப்பும்; அது  மேலோர்களால் மேற்கொள்ளப்பெற்றது
என்பதும் கூறியதாகும்.“இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்,
பெருமை பிறங்கிற்று உலகு” (குறள்.23) என்பதனைஒப்பு நோக்குக. ‘ஆல்’
அசை.                                                        6