2256.நடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும்
இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்;
ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர,
தொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்;

     (பரதன்), நடுங்கினன் - (முனிவன் சொன்னதைக் கேட்டு) நடுங்கி;
நாத்தடுமாறி - (பேசுதற்கியலாமல்) நாக் குழறி; நாட்டமும் இடுங்கினன் -
கண்கள்(குழிவிழுந்து ) உள்செல்லப் பெற்று;  மகளிரின் - பெண்களைப்
போல; இரங்கும் நெஞ்சினன்- நெஞ்சினாற் புலம்பிக் கொண்டு; ஒடுங்கிய
உயிரினன்- மூச்சு ஓடுங்கப்பெற்று(மூர்ச்சித்து); உணர்வு கைதர - (பின்னர்)
மூச்சு எழும்பி உணர்வு வரப்பெற; அரசவைக்கு- அரசவையில் உள்ளவர்க்கு;
உள்ளம் - தன் மனக்கருத்தை; சொல்லுவான் தொடங்கினன் - சொல்லத்
தொடங்கினான்.

     துக்கம் வந்தவுடன் அறிவழிந்து  புலம்பல் மகளிர் இயல்பு -
“பெட்டைப் புலம்பல்பிறர்க்குத் துணையாமோ’ (பாஞ்சாலி சபதம் 62.22.)
என்ற பாரதி பாடல் காண்க.                                     13