2281. | இன் துணையவர் முலை எழுது சாந்தினும் மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால் துன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய குன்று எனப் பொலிந்தன - குலவுத் தோள்களே. |
குலவுத்தோள்கள் - (ஆண்களின்) திரண்ட தோள்கள்; இன் துணைவர் -(அவர்களுடைய) இனிய மனைவியரது; முலைஎழுது சாந்தினும் - முலை மேல் தொய்யில்எழுதப்பெற்ற சாந்தினால்; மன்றல் அம் தாரினும் - (தாமே அணியும்) மணம் வீசும்மாலையால்; மறைந்திலாமையால் - இப்பொழுது மறையாமல்(இயற்கையாக உள்ளபடி) விளங்கித்தோன்றுதலால்; துன்று இளங்கொடி முதல் - நெருங்கிய இளைய கொடிமுதலாகிய; தூறு நீங்கிய- புதர்கள் இல்லாமற் போன; குன்று என - மலைபோல;பொலிந்தன- தோன்றின. மகளிர் கோலம் செய்யாமை போல ஆடவரும் உள்ளனர் என்பதாம். இன்துணையவர் என்றது காதலியராகிய மனைவியரை. ‘ஏ’ ஈற்றசை. 38 |