2294. | கனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய சினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம் - அனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர் மனம் கிடந்து உண்கில, மகளில் கொங்கையே? |
அனங்கன் ஐங்கொடுங்கணை அடரும் ஆடவர் மனம் - மன் மதனது (பிறரை வருத்தும்)ஐந்து கொடிய கணையால் நெருக்கப்படும் ஆண்களது மணம்; மகளிர் கொங்கை - பெண்களது முலைகளில்; கிடந்து உண்கில - இருந்து தங்கி அநுபவியாமல் போயின; கனம் குழை கேகய மகளின் கண்ணிய சினம் - கனமான காதணி அணிந்த கைகேயியின்மேல் (மகளிர்) கருதியசினம்; கிடந்து - பெண்கள் இடத்தே தங்கி; எரிதலின் - எரிகின்றகாரணத்தால்; தீர்ந்தவே கொல் - (கொங்கைகள் கடும் என்று கருதித்)தவிர்ந்தனவோ? கைகேயி ஒருத்தியால் எல்லா மகளிரையும் தயரதன் வெறுத்தான் என்பதனை முன்னர்க் (1516) கூறினார். கைகேயிமேல் உண்டாகிய நெருப்பு அனைத்து மகளிரிடத்திலும் தங்கியிருப்பதாகக் கருதி ஐங்கணை அடரவும் ஆடவர் கொங்கையை அநுபவியாது விட்டனர். ஐங்கணை - மலர் அம்பு ஐந்து, தாமரை, முல்லை, மா, அசோகு, நீலோற்பலம்ஆகிய ஐந்து மலர்களும் மன்மதன் அம்புகளாகும். “கொல்” ஐயம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 51 |