குகன் தன் சேனைக்குக் கட்டளை இடுதல்  

2314.தோன்றிய புளிஞரை நோக்கி, ‘சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென், என் உயிர்த் துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு; நீர் அமைதிர் ஆம்’ என்றான்.

     (தென்கரை வந்து  சேர்ந்த குகன்) தோன்றிய புளிஞரை நோக்கி -
(தென்கரையில்தன்னால் அழைக்கப்பட்டுத் தன்முன் வந்து) தோன்றிய
வேடர்களைப் பார்த்து; ‘ஆன்ற பேர்அரசு - நிரம்பிய பெரிய
அரசாட்சியை;  என் உயிர்த் துணைவற்கு - என் உயிர்போலச் சிறந்த
தோழனாகிய இராமனுக்கு; ஈகுவான் - தருவதற்காக; சூழ்ச்சியின்ஊன்றிய
சேனையை
- (அதனை அவன் பெறாமல் தடுக்கும்) ஆலோசனையோடு
எதிரில் (வடகரையில்)கால் ஊன்றி நிற்கும் (இப்பரதனது) சேனையை;
உம்பர் ஏற்றுதற்கு - (போரில்தொலைத்து) வீரசுவர்க்கத்தே செல்ல
விடுதற்கு;  ஏன்றனென் - தொடங்கியுள்ளேன்;  நீர் அமைதி ஆம்’ -
நீங்களும் இதற்கு உடன்படுவீர்களாக;  என்றான் - என்றுசொன்னான்.

     அரசன் கீழது சேனையாயினும், தன் கருத்தை அவர்கள்பால்
தெரிவித்து அவர்கள் உடன்பாடுவேண்டல் பண்பாட்டின் சிறப்பினைத்
தெரிவிக்கும்.  போரில் இறந்தார் வீரசுவர்க்கம்பெறுதல் நூல் முடிபு
ஆதலின் ‘உம்பர் ஏற்றுதல்’ என்று  அதனைக் கூறினான். ‘ஈகுவான்’
என்னும் வினையெச்சம், ‘ஏற்றுதற்கு’ என்னும் வினையொடு முடிந்தது.    12