2318. | “முன்னவன்” என்று நினைந்திலன்; ‘மொய் புலி அன்னான் ஓர் பின்னவன் நின்றனன்” என்றிலன்; அன்னவை பேசானேல், என் இவன் என்னை இகழ்ந்தது? இவ் எல்லை கடந்து அன்றோ? மன்னவர் நெஞ்சினில், வேடர் விடும் சரம் வாயாவோ? |
‘இவன் - இப் பரதன்; “முன்னவன்” என்று நினைந்திலன் - (இராமபிரானைக்குறித்து) தன் அண்ணன் என்று நினைந்தானில்லை; “மொய் புலி அன்னான் ஓர் பின்னவன்நின்றனன்” - வலிமை நெருங்கிய புலியை ஒத்த இளவலாகிய இலக்குவன் இராமனுக்குத் துணையாக உடன் உள்ளான்; என்றிலன் - என்று கருதினானும் இல்லை; அன்னவை பேசானேல் -அந்த (இராம இலக்குவர்களாகிய) இரண்டையும் பற்றி நினைக்காமல் விட்டாலும்; என்னைஇகழ்ந்தது என் - (இடையே கங்கைக் கரை யுடைய) என்னையும் (ஒரு பொருளாக மதியாமல்)இகழ்ந்தது என கருதி?; இவ் எல்லை கடந்து அன்றோ - (இவன் இராமன்பால் போர்செய்வது)இந்த எனது எல்லையைக் கடந்து சென்றால் அல்லவா?; வேடர் விடும் சரம் - வேடர்கள்விடுகின்ற அம்புகள்; மன்னவர் நெஞ்சினில் - அரசர்கள் மார்பில்; வாயாவோ’ -தைத்து உள் நுழைய மாட்டாவோ? இராமனைத் தமையன் என்று கருதியிருந்தால் அரசை அவன்பால் கொடுத்திருப்பான், புலி அன்னஇலக்குவன் இராமன் உடன் உள்ளான் என்று கருதினால் போருக்கு வராமல் இருந்திருப்பான் என்றான்.என் ஆற்றலையும் உணராதவனாய் உள்ளானே என்று இகழ்ந்தானாம் - இறுதியடி இகழ்ச்சிக்குறிப்பாகப் பேசிய வீரவசனம். ‘அன்னவை பேசானேல்’ பேசுதல் எண்ணுதல் என்ற பொருளில்வந்துள்ளது. எண்ணுதலைப் பேசுதல் என்றது உபசார வழக்குஆகும். 16 |