பரதன் நிலை கண்டு, குகன் திடுக்கிடுதல் 2330. | என்று எழுந்த தம்பியொடும், எழுகின்ற காதலொடும், குன்று எழுந்து சென்றது எனக் குளிர் கங்கைக் கரை குறுகி நின்றவனை நோக்கினான், திரு மேனி நிலை உணர்ந்தான், துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்; துண்ணென்றான். |
(பரதன்) என்று - இவ்வாறு சொல்லி; எழுந்த தம்பியொடும் - தன்னுடன்புறப்பட்ட சத்துருக்கனனொடும்; எழுகின்ற காதலொடும் - (இராமனிடத்தில்அன்புடையவனும், இராமனால் அன்பு செய்யப் பெற்றவனும் ஆகிய குகனைப் பார்க்கப் போகிறோம்என்று) உள்ளே மேலும் மேலும் உண்டாகின்ற பேரன்போடும்; குன்று எழுந்து சென்றது என -ஒருமலை புறப்பட்டுச் சென்றது என்று சொல்லுமாறு; குளிர் கங்கைக் கரை குறுகி- குளிர்ச்சி மிகுந்த கங்கையின் வடகரையை அணுகி; நின்றவனை - நின்ற பரதனை; துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்- நெருங்கிய கருமையான மணம் வீசும் தலைமுடி உடையவேடர் தலைவனாய குகன்; நோக்கினான் - கண்ணால் (மனக் கருத்தோடு) பார்த்தான்; திருமேனி நிலை - வாடிச் சோர்ந்துள்ள பரதனது திருமேனியின் வாட்டமான உணர்ந்து கொண்டான்; துண் என்றான் - திடுக்குற்றான். பரதனைத்பற்றித் தான் எண்ணியதற்கும், அவன் நிலைக்கும் மிகவும் மாறுபாடாக இருந்தது கண்டு துணுக்குற்றான் என்க. இராம இலக்குவர் போலே பரத சத்துருக்கணர் ஆதலின், ‘எழுந்த தம்பி’என்று பரதன் கட்டளை இட வேண்டாது அவன் குறிப்புணர்ந்து சத்துருக்கனன் புறப்பட்டான். 28 |