2338. | ‘என் புகழ்கின்றது, ஏழை எயினனேன்? இரவி என்பான்- தன் புகழ்க் கற்றை, மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல், மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம். உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் - உயர் குணத்து உரவுத் தோளாய்! |
‘உயர் குணத்து உரவுத் தோளாய்!- உயர்த்த உத்தமக் குணங்களையும், வலிமையான தோளையும் உடைய பரதனே!; ஏழை எயின னேன் - அறிவில்லாத வேடனாகிய யான்; என் புகழ்கின்றது? - எவ்வாறு புகழ முடியும்; இரவிஎன்பான் தன்- சூரியன் என்று சொல்லப்படுகிறவனது; புகழ்க் கற்றை- புகழாகியஒளித்தொகுதி; மற்றை ஒளிகளைத் தவிர்க்குமா போல் - மற்றைக் கோள்கள், உடுக்களின் ஒளிகளையெல்லாம் அடக்கிக் கீழ்ப்படுத்தித் தான் மேற் சென்றுள்ளவாறு போல;மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் - எல்லா அரசர்களாலும் பாராட்டப்பெறும் பெருமை படைத்த உங்கள் சூரிய வம்சத்து முன்னைய அரசர்களது எல்லாப்புகழ்களையும்; உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் - உனது புகழுக்கும் அடங்குமாறு செய்துகொண்டுவிட்டாய். ‘ஏழை எயினன்’ - குகன் தன்னடக்கமாகக் கூறிக்கொண்டான். சூரியனுக்குப் புகழ் என்பது ஆதலின் அதனைப் ‘புகழ்க்கற்றை’ என்றார். மரபினோர் புகழ்கள் முன்பு பேசப்பட்டன; இனி, பரதன் புகழே பேசப்படும் என்பதாகும். 36 |