2341. கார் எனக் கடிது சென்றான்;
     கல்லிடைப் படுத்த புல்லின்,
வார் சிலைத் தடக் கை வள்ளல்,
    வைகியபள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்;
    பருவரற்பரவை புக்கான்-
வார் மணிப் புனலால் மண்ணை
    மண்ணுநீர்ஆட்டும் கண்ணான்.

     (குகன் காட்டிய இடத்துக்குப் பரதன்) கார் எனக் கடிது சென்றான் -
மேகம் போலவிரைவாகச் சென்று; வார் சிலைத் தடக்கை வள்ளல் -
கட்டமைந்த வில்லேந்திய நீண்டகைகளை உடைய இராமன்; வைகிய -
தங்கியிருந்த; கல்லிடைப் படுத்த புல்லின் பள்ளி -கற்களின் இடையே
பரப்பப்பெற்ற புல்லால் ஆகிய படுக்கையை; கண்டான் - பார்த்து;
பார்மிசை - பூமியின் மேல்; பதைத்து - துடித்து; வீழ்ந்தான் - விழுந்து;
பருவரல் பரவை புக்கான் - துன்பம் எனும் கடலில் புகுந்து; வார் மணிப்
புனலால்
- பெருகுகின்ற முத்துமணி போன்ற கண்ணீரினால்;

மண்ணை - பூமியை; மண்ணு நீர் ஆட்டும் - திருமஞ்சனத் தண்ணீரால்
குளிப்பாட்டுகின்ற; கண்ணான் - கண்ணுடையவனாக ஆனான்.

     பரதன் மனத்தின் பதைபதைப்பும், அதனால் ஏற்பட்ட துன்பமும்,
அதன்வழி உண்டாகின்ற கண்ணீர்ப்பெருக்கும் மிகுந்த படியைக் கூறினார்.
இராமபிரான் வைகியஇடத்தைத் திருமஞ்சனம் ஆடடினான் என்பது
போலக் கூறியது கவிநயம் - “ மண்ணக மடந்தையை மண்ணுநீர் ஆட்டி
(பெருங். 1-49-89) என்பது போல. ‘கார் என’ என்கின்ற உவமை பரதனது
திருமேனிநிறம், அவன் விரைந்து சேறல், பின் நீர்பொழிதல் (கண்ணீர்)
ஆகிய அனைத்துக்கும்பொருந்துதல் அறிந்து மகிழத்தக்கது.