குகன் கட்டளையிட, நாவாய்கள் வருதல் 2347. | ‘நன்று’ எனப் புளிஞர் வேந்தன் நண்ணினன் தமரை; ‘நாவாய் சென்று இனித் தருதிர்’ என்ன, வந்தன- சிவன் சேர் வெள்ளிக் குன்று என, குனிக்கும் அம் பொன் குவடு என, குபேரன் மானம் ஒன்று என, நாணிப் பல் வேறு உருவு கொண்டனைய ஆன, |
(பரதன் கூறியது கேட்டு) புளிஞர் வேந்தன் - வேடர் வேந்தனாய குகன்; ‘நன்று’- நல்லது (அவ்வாறே செய்வேன்) என்று சொல்லி; தமரை நண்ணினன் - தன் இனத்தவரைஅடைந்து; ‘சென்று இனி நாவாய் தருதிர்’ என்ன - (நீங்கள்) சென்று இனிமேல்படகுகளைக் கொண்டு வருக என்று சொல்லிவிட; (நாவாய்கள்) சிவன் சேர் வெள்ளிக் குன்று என- சிவபெருமான் வீற்றிருந்து அருளும் (திருக்கயிலாயம் எனப்பெறும்) வெள்ளிமலை போல; குனிக்கும் அம்பொன் குவடு என - (அச்சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில்) வளைத்த(மகா மேரு மலையாகிய) பொன்மலை போல; குபேரன் மானம் என - (வடதிசைக்கு அதிபனாகிய) குபேரனது புஷ்பக விமானம் போல; ஒன்று என நாணி - (இவையெல்லாம்) தாம்ஒன்றாய் இருப்பதற்கு வெட்கமுற்று; பல்வேறு உருவு கொண்டனைய ஆன - அவை தாமேஒவ்வொன்றும் பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொண்டாற்போன்றவையாகிய நாவாய்கள்; வந்தன- (கங்கையின் கண்) வந்து சேர்ந்தன. பல்வேறு வடிவும் நிறமும் பருமையும் உடைய படகுகளை வெள்ளிமலை, பொன்மலை, புஷ்பக விமானம் பல்வேறு வடிவுகொண்டு வந்துள்ளதாகக் கற்பனை செய்தார்; இது தற்குறிப்பேற்றம் உவமையணியுடன் வந்தது. ‘குபேரன் மானம் என’ என்று ‘என’ வைப் பிரித்துக் கூட்டுக. 45 |