பரதன் சேனைகள் கங்கையைக் கடத்தல்  

2349. ‘வந்தன, வரம்பு இல் நாவாய்;
     வரி சிலைக் குரிசில் மைந்த!
சிந்தனை யாவது?’ என்று,
     சிருங்கிபேரியர்கோன் செப்ப,
சுந்தர வரி விலானும்
     சமந்திரன்தன்னை நோக்கி,
‘எந்தை! இத் தானைதன்னை ஏற்றுதி,
     விரைவின்’ என்றான்.

    சிருங்கி பேரியர் கோன்- சிருங்கிபேரம் என்னும் நகரில்
உள்ளார்க்கு அரசன் ஆகிய குகன்;  (பரதனை நோக்கி) ‘வரிசிலைக்
குரிசில் மைந்த
- கட்டமைந்த வில் தொழிலிற் சிறந்த தயரத குமாரனாகி
பரதனே!; வரம்பு இல் நாவாய் வந்தன - கணக்கில்லாத படகுகள்
வந்துள்ளன; சிந்தனையாவது’ - (உன்) மனக்கருத்து என்ன?; என்று
செப்ப - என்று சொல்ல; சுந்தரவரிவில்லானும் - அழகிய கட்டமைந்த
வில்லானாகிய பரதனும்; சுமந்திரன் தன்னைநோக்கி - (மதியமைச்சருள்
மூத்தோனாகிய) சுமந்திரனைப் பார்த்து; ‘எந்தை - என்தந்தையே!;
இத்தானை தன்னை - இச்சேனைகளை; விரைவின் ஏற்றுதி’-விரைவாகப்
படகில் ஏற்றுக; என்றான் - என்று சொன்னான்.

     சிருங்கி பேரன் என்பது குகனது நாட்டின் தலைநகரம். ‘வரிசிலைக்
குரிசில்’ என்று தயரதனைக் கூறியதற்கேற்பச் ‘சுந்தர வரிவிலானும்’ என்று
இப் பாடலிலேயே பரதனைக் குறிப்பிட்டது ஒரு நயம். சுமந்திரன் தேர்
ஒட்டுதலில் வல்லவன்; அமைச்சன்; தயரதனுக்கு மிகவும் அணுக்கமானவன்.
ஆதலின், அவனைத் தன் தந்தையெனவே கொண்டு கூறினான் பரதன்.
எந்தை - அண்மைவிளி.                                         47