2590. நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்;
கர கதக் கரி கால் நிமிர்த்து உண்டன;
மரகதத்தின் கொழுந்து என வார்த்த புல்
குரகதத்தின் குழாங்களும் கொண்டவே.

     கர கதக் கரி - துதிக்கையை உடைய கோபமுற்ற யானைகள்;
நரகதர்க்கு -நரகத்தை அடைய வல்ல பாவிகளுக்கும்; அறம் நல்கும் -
புண்ணியப் பயனைத் தந்து  (அந்நரகத்திலிருந்து) அவரை மீட்க வல்ல;
உண்டன - கால்களை நிமிர வைத்துப் பருகின; குரகத்தின் குழாங்கள் -
குதிரைக் கூட்டங்கள்; மரகதத்தின் கொழுந்து என வார்ந்தபுல்- மரகத
மணியின் ஒளிக்கொழுந்துபோல் பசிய நீண்ட புல்லை; கொண்ட -
உட்கொண்டன.

     யானைகள் நீர் உண்டதும், குதிரைகள் புல் உண்டதும் கூறியபடி.
நரகு அதர்க்கு ‘எனப்பிரித்து, நரக வழிக்கு அறம் நல்கும் எனப் பொருள்
உரைத்தலும் ஒன்று. நீர் தேவகங்கைநீர். தீர்த்த விசேடம் ஆதலின்
பாவத்தை மாற்றும் தன்மை படைத்தது என்றாராம். ‘ஏ’ஈற்றசை.        16