பரதன் சேனை எழுச்சி கண்டு இலக்குவன் சீற்றம் அடைதல் 2400. | எழுந்தனன், இளையவன்; ஏறினான், நிலம் கொழுந்து உயர்ந்தனையது ஓர் நெடிய குன்றின்மேல்; செழுந் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக் கழுந்துடை வரி சிலைக் கடலை நோக்கினான். |
(பரதன் சேனைகள் வரும் நிலையைத் தன் குறிப்பால் உணர்ந்து) இளையவன் -இலக்குவன்; எழுந்தனன் - எழுந்து; நிலம் கொழுந்து உயர்ந்தனையது ஓர் நெடியகுன்றின்மேல் ஏறினான் - நிலவுலகம் கொழுந்துவிட்டு உயர்ந்தாற் போன்றதான ஒருநீண்டுயர்ந்த மலையின் மேல் ஏறி; செழுந்திரைப் பரவையை - வளவிய அலைகளையுடையகடலை; சிறுமை செய்த - சிறியது எனக் கருதும்படி செய்த; அக் கழுந்து உடை வரிசிலைக் கடலை - அந்த வலிமை மிக்க கட்டமைந்த வில்லை ஏந்திய சேனைக் கடலை; நோக்கினான் - பார்த்தான். நலத்தின் மேல் உள்ள நெடிய மலை, நிலம் கொழுந்துவிட்டு உயர்ந்தது போல் உள்ளதுஎன்றார். தற்குறிப்பேற்றம். சேனைக் கடலின் பெருமை நோக்கியவழி கடல் சிறியதாக உள்ளது.கழுந்து - வலிமை. “கழுந்தோடும் வரிசிலைக்கைக் கடற்றானை” (237.) எனப் பாலகாண்டத்து வருதல்காண்க. கழுந்து - வில்லின் கழிப் பகுதியாகும் என்பதும் ஒன்று. வில்லை இடையறாது கையிற்பிடித்தலால் தேய்ந்து வழுவழுப்பாதலைக் ‘கழுந்து’ எனக் கூறுவதாகவும் பொருள் உரைப்பர்.இளையவன் எழுந்து, ஏறி, நோக்கினான் என முடிக்க. 26 |