2401. | ‘பரதன், இப் படைகொடு, பார்கொண்டவன், மறம் கருதி, உள் கிடந்தது ஓர் கறுவு காதலால், விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான்; இது சரதம்; மற்று இலது’ எனத் தழங்கு சீற்றத்தான். |
‘பார் கொண்டவன் பரதன் - நிலத்தைக் கைக்கொண்டு ஆள்பவனாகிய பரதன்; இப்படை கொடு - இந்தச் சேனையைக் கொண்டு; மறம் கருதி - போர்த் தொழிலைக்கருதி; உள் கிடந்தது ஓர் கறுவு காதலால் - தன் மனத்தகத்தே தங்கிய வஞ்சனையோடுகூடிய பேராசையால்; விரதம் உற்று இருந்தவன்மேல் வந்தான் - தவ விரதம் மேற்கொண்டுள்ள இராமன்மேல் பிடையெடுத்து வந்துள்ளான்; இது சரதம்- இதுவே உண்மை; மற்று இலது’ - வேறு ஒன்றும் இல்லை; எனத் தழங்கு சீற்றத்தான்- என்று எண்ணிமிக்க கோபம் உடையவனாய்.....(மேல் முடியும்). பதினான்கு ஆண்டு முடிந்த பின்னர் மீண்டு வந்து தன் அரசைக் கவர்ந்து கொள்வானேஎன்கின்ற கருத்தால் படையெடுத்து வந்துள்ளான் என நினைக்கும் இலக்குவன் அதனையே ‘உள்கிடந்தது ஒரு கறுவு காதல்’ என்றான். 27 |