இராமன் இலக்குவனுக்குப் பரதனைத் தெளிவுறுத்தல்  

2416.“இலக்குவ! உலகம் ஓர் ஏழும், ஏழும், நீ,
“கலக்குவென்” என்பது கருதினால் அது,
விலக்குவது அரிது அது விளம்பல் வேண்டுமோ?-
புலக்கு உரித்து ஒரு பொருள், புகலக் கேட்டியால்.

     ‘இலக்குவ’ - இலக்குவனே!;  நீ உலகம் ஓர் ஏழும் ஏழும்
“கலக்கும்” என்பது கருதினால்
- நீ பதினான்கு  உலகங்களையும் நிலை
கலங்கச் செய்வேன் என்பதைக் கருதிச்செயற்பட்டால்; அது - அச்செயல்;
விலக்குவது அரிது - யாராலும் தடுத்தற்கரியது; அது விளம்பல்
வேண்டுமோ?
- அதைச் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை
(உலகப்பிரசித்தமாய் அனைவரும் முன்பு அறிந்துள்ளதே); புலக்கு உரித்து-
(அது கிடக்க,இப்போது) அறிவுக்கு உரிய; ஒரு பொருள் - ஒரு செய்தியை;
புகல - (நான்உனக்குச்) சொல்ல;  கேட்டி - கேட்பாயாக...

     பெருத்த வீர வார்த்தைகளைப் பேசிச் சினத்துடன் சீறி நிற்கும்
இலக்குவன் பால்,பரதனைப் பற்றித் தெளிவுறுத்தத் தொடங்கும் இராமன்
முதலில் உபதேசத்தைத் தொடங்காது, அவனதுசினத்தையும்
பேராற்றலையும் மதித்துப் பாராட்டிப் பேசியது மனித இயல்புக்கு ஒத்து
அமைந்தது பாராட்டத்தக்கது. புலக்கு - புலத்துக்கு - ‘அத்து’ கெட்டது.
“கல்லார்ப் பிணிக்கும்” என்றகுறளில், ‘நிலத்துக்கு’ என்பது ‘நிலக்கு’ என்று
நின்றாற் போல. (குறள். 570.) செய்யுள்விகாரம் என்பர் பரிமேலழகர் -
புலம் என்பது அறிவு. சினம் மிக்குழி அறிவு எழாது ஆதலின் -சினத்தை
அடக்கி அறிவினால் சிந்தித்தல் வேண்டும் என்பது உணர்த்தினானாம்.
‘ஆல்’ஈற்றசை.                                               42