2419. | ‘ “பெருமகன் என்வயின் பிறந்த காதலின் வரும் என நினைகையும், மண்ணை என்வயின் தரும் என நினைகையும்” தவிர, “தானையால் பொரும்” என நினைகையும் புலமைப்பாலதோ? |
“பெருமகன் - பரதன்; என்வயின் பிறந்த காதலின் - என்னிடத்து உண்டாகிய அன்பினால்; வரும் என நினைகையும் - (காடு நோக்கி) வருகின்றான் என்றுநினைப்பதும்; மண்ணை - கோசல அரசை; என்வயின் - என்னிடம்; தரும் எனநினைகையும்” - தருவான் என நினைப்பதும்; தவிர - நீங்க; “தானையால் -சேனைகளால்; பொரும் - போர் செய்வான்; என நினைகையும்” - என்றுநினைப்பதும்; புலமைப்பாலதோ? - அறிவின்பாற் பட்டது ஆகுமோ?... (அன்று என்றபடி) அன்பு முதிர்ந்தவழி அறிவு தொழிற்படாது ஆதலின், என் வயின் நேயம் மீதூர்ந்ததால்பரதனை அறிவால் அறிய இயலாதவன் ஆனாய் என்று இதற்கும் ஓர் அமைதியை இலக்குவனுக்கு முன்பேகூறியது காண்க. “காதல் மிக்குழிக்கற்றவும் கைகொடா” (சிந்தா- 1632.) என்பது ஈண்டுநினைக்கத் தருவது, பரதன் வருவதன் உண்மை இராமனால் தெளிவாக இலக்குவற்கு உணர்த்தப்பட்டது. 45 |