2421.‘சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின்
ஆணியை, அன்னது நினைக்கல் ஆகுமோ?
பூண் இயல் மொய்ம்பினாய்! போந்தது ஈண்டு, எனைக்
காணிய; நீ இது பின்னும் காண்டியால்.’

     ‘பூண் இயல் மொய்ம்பினாய்! - அணி அணிந்த தோள்களை
உடையவனே!;  சேண்உயர் தருமத்தின் தேவை - மிக உயர்ந்த
தருமத்தின் தெய்வ வடிவமான; செம்மையின்ஆணியை -
நல்லொழுக்கமாகிய செம்மையின் உரைகல்லாக விளங்குகின்ற உத்தம
பரதனை;  அன்னது - (நீ நினைத்தாற் போல) அப்படித் தவறுபட;
நினைக்கல் ஆகுமோ? -கருதலாமா?;  ஈண்டுப் போந்தது - (பரதன்)
இங்கே வந்தது; எனைக் காணிய -என்னைக் காண்பதற்காக;  இது -
இக்கருத்தினை; நீ - இலக்குவ நீ!; பின்னும் - (அவன் நெருங்கிய) பிறகும்;
காண்டி - (அவன்பால் நேரில்) பார்த்து அறிவாயாக.

     அறக் கடவுள், செம்மையின் ஆணி பரதன். செம்மை - மனக்
கோட்டம்  இன்மையாம்.நடுவுநிலைமை  என்பதாம். எனவே, அரசின்பால்
பற்று வைத்து ஒருபாற் கோடும் தன்மை அவனுக்கில்லை என்பதாம். ஆணி
என்பதற்கு ‘அச்சாணி’
என உரை தந்து  செம்மைத் தேரை நிலைநிறுத்தும்
அச்சாணி என்று உரை கோடலும் ஏற்றுமேல்கொள்க. பூண் இயல்
மொய்ம்பு - அணிகலனாகப் பொருந்திய வலிமை என்றும் ஆம்.
‘ஆல்’ஈற்றசை.                                             47