பரதன் நிரை நோக்கிய இராமன் இலக்குவனிடம் கூறுதல் 2423. | தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன் அழுது அழி கண்ணினன்; ‘அவலம் ஈது’ என எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை முழுது உணர் சிந்தையான், முடிய நோக்கினான். |
முழுது உணர் சிந்தையான் - எல்லாவற்றையும் எப்பொழுதும் அறிந்தவாறே அறியும்திருவுள்ளமுடைய இராமன்; தொழுது உயர்கையினன் - தொழுதபடி உயர்த்திய (உச்சிமேல்கூப்பிய) கையை உடைய; துவண்ட மேனியன் - (துன்பத்தால் துடித்து) வாடிய உடம்பை உடைய;அழுது அழி கண்ணினன் - (இடையறாது) புலம்புதலால் (நீர் வழிந்து, பொலிவழிந்த கண்களைஉடைய; ‘அவலம் ஈது’ என எழுதிய படிவம் ஒத்து - அழுகை என்பது இதுதான் என்று எழுதிய வடிவம் போல; எய்துவான் தனை - வருகின்ற பரதனை; முடிய நோக்கினான் - முடிமுதல்அடிவரையிலும் நன்றாகப் பார்த்தான். ‘அவலம்’ என்ற அழுகையென்ற மெய்ப்பாட்டுக்கு ஒரு படம் வரைந்து அது பரதனாகும் என்பதாம்.அம்மெய்ப்பாட்டின் தன்மை - துவண்ட மேனி, அழுதழி கண் முதலவாம். ‘துன்பமொரு முடிவில்லைதிசைநோக்கித் தொழுகின்றான்’ என (2332.) முன்னர்க் கூறியதனை ஈண்டுக்கருதுக. 49 |