பரதன் இராமனின் திருவடி வணங்குதல் 2426. | கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய நாதனைப் பிரிந்தனள், நலத்தின் நீங்கினாள், வேதனைத் திருமகள் மெலிகின்றாள், விடு தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான். |
கோது அறத் தவம் செய்து - குற்றமில்லாமல் நல்ல தவத்தைச் செய்து; குறிப்பின் எய்திய - தன் மனக்கருத்தின் வண்ணம் பெற்ற; நாதனை - தன்நாயகனை; பிரிந்தனள்- பிரிந்து; நலத்தின் நீங்கினான்- எல்லாநன்மைகளிலிருந்தும் நீங்கிய; வேதனை மெலிகின்றாள் - துன்பத்தால் மெலிகின்ற; திருமகள் - இராச்சிய லட்சுமி; விடு தூது என - (இராமநாயகன் பால்) அனுப்பிய தூது போல; பரதனும்-; தொழுது - வணங்கி; தோன்றினான்-. பன்னெடுங்காலம் செய்த நற்றவத்தால் இராமனை அரசனாகப் பெறும் பாக்கியம் கோசல அரசுக்குக் கிடைத்தது. அது உடனே இழக்கப்பெற்றபடியால் இவ்வாறு கூறினார். மீண்டும் கோசல அரசை இராமன் ஏற்க வேண்டுதற்கு வந்தவன் பரதன் ஆதலின் ‘விடு தூது’ எனப் பெற்றான். தற்குறிப்பேற்றவணி. 52 |