2427.‘அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;
துறந்தனை முறைமையை’ என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலர்அடி வந்து வீந்தனன் -
இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னவே.

     வந்து - (பரதன் இராமன் அருகில்) வந்து; இறந்தனன் தாதையை -
இறந்து போன தந்தையாய தயரதனை; எதிர் - தன் எதிரே; கண்டு
என்னவே
- மீண்டும்கண்டாற்போல; (இராமனைக் கண்டு) ‘அறம் தனை
நினைந்திலை
- அரச ஏற்றல் அறம்தான்என்பதை நினையவில்லை;

அருளை நீத்தனை - இரக்கம் அற்றவனாக ஆயினாய்; முறைமையைத்
துறந்தனை”
- மூத்தவன் அரசாளுதல் என்கின்ற முறைமையயும்
கைவிட்டாய்;’ என்னும் சொல்லினான் -என்கின்ற சொற்களைக்
கூறியவனாய்; மறந்தனன் - தன் உணர்வு கெட்டு; மலர் அடி-
(இராமனது) மலர் போன்ற பாதங்களில்; வீழ்ந்தனன் - விழுந்தான்.

     அறம் - அரசாளுதல் அரச தர்மம் என்பது. பரதன்பால்
காட்டவேண்டிய இரக்கம் - தான் அரசாளாது பரதன் அரசேற்க
விரும்பமாட்டான் என்று உணராது அவன்பால் அரசைத் தள்ளிவிட்டு
வந்தது இரக்கமின்மையாம். மூத்தவளாகிய தான் அரசாளவேண்டியது
முறைமை யாதலின், முறைமையைத் துறந்தனை என்றான். இவ்வளவும்
பரதனது ஆற்றாமையைப் புலப்படுத்துவனவாகக் கொள்க. ‘ஏ’ ஈற்றசை.   53