இராமன் மனம் கலங்கிப் பரதனைத் தழுவுதல்  

2428.‘உண்டுகொல் உயிர்?’ என ஒடுங்கினான் உருக்
கண்டனன்; நின்றனன் - கண்ணன் கண்எனும்
புண்டரீகம் பொழி புனல், அவன் சடா
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே.

     கண்ணன் - அருட்கண்ணுடையவனாகிய இராமன்; ‘உண்டு கொல்
உயிர்’ என ஒடுங்கினான்
- உயிர் உண்டோ இல்லையோ என்று காண்பார்
ஐயுறுமாறு மெலிந்து நின்றபரதனது; உரு - வடிவத்தை; கண்டனன்-
பார்த்து; கண் எனும் புண்டரீகம்- (தன்) கண் என்கின்ற தாமரைகள்;
பொழி புனல்- இரக்கத்தாற் சொரிகின்றகண்ணீர்; அவன் சடாமண்டலம்
நிறைந்து போய்
- அப்பரதனது சடைமுடியிற் போய்நிரம்பி மேற்சென்று;
வழிந்து சோர - பெருகி வழிந்தொழுக; நின்றனன் -நின்றான்.

     பரதன் உருவ மெலிவு இராமனது உள்ளத்தை உருக்கியது; கண்ணீர்
பெருகியது; அதனால் காலில் விழுந்த பரதனது சடைமுடியைக் கண்ணீர்
நிறைத்தது. ‘கொல்’ - ஐயம். மண்டலம் - வட்டம், சடாமண்டலம் -
வட்டமாகச் சடையைச் சுழித்துக் கட்டுதலாம்.                        54