2433.இரு நிலம் சேர்ந்தனன்; இறை உயிர்த்திலன்;
‘உரும் இனை அரவு’ என, உணர்வு நீங்கினான்;
அருமையின் உயிர் வர, அயாவுயிர்த்து, அகம்
பொருமினன்; பல் முறைப் புலம்பினான் அரோ;

     (இராமன்) இரு நிலம் சேர்ந்தனன் - மண்ணில் விழுந்து; இறை -
சிறிதளவும்; உயிர்த்திலன் - மூச்சுவிட்டானில்லை; ‘உரும் இனை அரவு’
என
-இடியால் வருந்தும் பாம்பு போல; உணர்வு நீங்கினான் - உணர்ச்சி
நீங்கப் பெற்றான்; அருமையின் - மிகச் சிரமமாக;  உயிர் - உயிர்ப்பு
உளதாக; அயாவுயிர்த்து- பெருமூச்சுவிட்டு;  அகம் பொருமினன் -
உள்ளே கலங்கி; பல் முறை புலம்பினான்- பலபடியாகச் சொல்லிப்
புலம்பலானான்.

     இடியேறுண்ட நாகம் போல வருந்தினான் என்றல் வழக்கு. அடியோடு
உயிர்ப்பற்ற இராமன் சிறிதளவு அருமையாக உயிர்ப்பு வந்து, ஆற்றாமை
நீங்கப் பெருமூச்சு விட்டுப் பின்னர் உள்கலங்கிப் புலம்பினானாம். ‘அரோ’
ஈற்றசை.                                                     59