2435. | ‘சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி, நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி, எற் பெற்று, நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ?- கொல் பெற்ற வெற்றிக் கொலை பெற்ற கூர் வேலோய்! |
‘கொன் பெற்ற - அச்சம் தருதலை உடைய; வெற்றிக் கொலை பெற்ற -தமக்கு வெற்றி உண்டாகும் கொலைத் தொழிலை உடைய; கூர் வேலோய் - கூரிய வேற்படையைஉடைய தயரதனே; சொல்பெற்ற - புகழ் உடைய; நோன்பின் துறையோன் -தவத்துறையில் சிறந்த கலைக்கோட்டு முனிவனது; அருள் வேண்டி- கருணையை வேண்டிப்பெற்று; நல் பெற்ற வேள்வி - நல்ல புத்திர காமேஷ்டியோடு கூடிய பரிமேத வேள்வியை; நவை நீங்க - பிள்ளை இல்லாக் குறை தீர; நீ இயற்றி - நீ செய்து; என்பெற்று - என்னை மகனாகப் பெற்று; நீ பெற்றது - நீ அடைந்த பயன்தான்; இன்உயிர் போய் நீங்கலோ? - இனிய உயிர் போய் இறக்கப் பெறுதல்தானோ? சொல் - புகழ். கலைக்கோட்டு முனிவரை அரிதின் கொண்டுவந்து வேள்வி இயற்றி இராமனைப் பெற்றானாதலின் இங்ஙனம் கூறப்பெற்றான். மக்களைப் பெற்று மகிழ எண்ணியவன் அம்மக்களைப் பிரிந்த துன்பத்தாலே உயிர் போகப் பெறுதலால் இரக்கம் பெரிதாயிற்று. தயரதன் இறப்புக்குத் தானே காரணமானோம் என்று இராமன் இரங்கினன். கொன் - அச்சம், பெருமை எனப் பொருள்படும். உரிச்சொல் - இனி, கொல் பெற்ற எனில் கொலையாம், பின்னரும் கொலைபெற்ற என வருதலின் அங்ஙனம் பிரித்தல் ஏலாதாம். வேள்வியால் மக்கள் நால்வர் தயரதனுக்கு உளர் ஆயினும் தயரதன் இறப்புக்கு இராமன் பிரிவு ஒன்றே காரணம் ஆதலின் ‘எனப்பெற்று’ என்று கூறியதாகக் கருதுக. 61 |