இராமன் நீர்க்கடன் செய்து மீளுதல்  

2454.என்றபின், ஏந்தலை ஏந்தி வேந்தரும்,
பொன் திணிந்தன சடைப் புனிதனோடும் போய்ச்
சென்றனர், செறி திரைப் புனலில்; ‘செய்க’ என,
நின்றனர்; இராமனும் நெறியை நோக்கினான்.

     என்றபின் - என்று முனிவன் கூறிய பிறகு; ஏந்தலை ஏந்தி -
இராமனைக்கொண்டாடி; வேந்தரும் - அரசர்களும்; பொன் திணிந்தன
சடைப் புணிதனோடும் போய்
- பொன்னைத் திணித்து வைத்தாற்போன்ற
சடைகளை உடைய தவத்தோனாகிய வசிட்டனோடும் போகி;செறிதிரைப்
புனலில்
- நெருங்கிய அலைகளையுடைய  நதிநீரில்; சென்றனர் -சென்று
சேர்ந்தனர்; ‘செய்க’ என நின்றனர் - (இராமன் நீர்க்கடன்) செய்க என்று
நின்றார்கள்; இராமனும் நெறியை நோக்கினான் - இராமனும்
செய்யவேண்டிய வழிமுறைகளைச்சிந்தனையால் நோக்கினான்..

     வசிட்டரும் வேந்தரும் நதிப்புனலில் சென்று நிற்க, இராமனும்
நீர்க்கடன் செய்யும் கிரியை முறைகளை நோக்கினானாம்.              80