2458.வெந் துயர் தொடர்தர விம்மி விம்மி, நீர்
உந்திய நிரந்தரம்; ஊற்று மாற்றில;
சிந்திய - குரிசில் அச் செம்மல் சேந்த கண் -
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே!

     குரிசில் அச்செம்மல் - குரிசிலாகிய அந்தப் பரதனது; சேந்த கண்-
சிவந்த கண்கள்; இந்தியங்களில் - (கண் முதலாகிய) பொறிகளில்;
எறிகடல் உண்டுஎன்ன - அலை வீசுகிற கடல் இருக்கிறது என்று
சொல்லும்படி; வெந் துயர் தொடர்தர- கொடிய சோகம் பீடித்தலால்;
விம்மி விம்மி-; நீர் - நீரை; உந்திய- வெறிச் செலுத்தின; நிரந்தரம் -
எப்பொழுதும்; ஊற்று - பெருகுதல்; மாற்றில - நீங்காதவையாய்; சிந்திய -
(நீரைச்) சொரிந்து கொண்டேயிருந்தன.

     பூமியிற் கடல்போல இந்திரியங்களிலும் கடல் உண்டு போலும் என்று
கண்டார் நினைக்கும்படிஇருந்தது  பரதன் கண்களில் நீர் பெருகும் தன்மை
என்பதாம்.  இந்திரியம் எனப்து ஐம்பொறிகளையும் குறிக்குமேனும்  சிறப்பு
வகையால் இங்குக் கண்களைமட்டும் கொள்க. ‘ஏ’ஈற்றசை.            84