இராமனும் தாயரும் அழ, யாவரும் அழுதல் 2464. | ‘எந்தை யாண்டையான் இயம்புவீர்?’ எனா, வந்த தாயர்தம் வயங்கு சேவடிச் சிந்தி நின்றனன், சேந்த கண்ண நீர்- முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான். |
முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான் - எல்லாவற்றிற்கும் முற்பட்டநான்முகனாகிய பிரமனுக்கும் முற்பட்டவனாகிய இராமன்; ‘எந்தை யாண்டையான் இயம்புவீர்’ எனா- என் தந்தை தயரதன் எங்குள்ளான் சொல்லுங்கள் என்று; வந்த தாயர்தம் வயங்கு சேவடி- தன்னை வந்தடைந்த தாய்மார்களது விளங்கிய திருவடிகளில்; சேந்த கண்ணநீர் - சிவந்த தன் கண்களிலிருந்து நீரை; சிந்தி நின்றனன் - சொரிந்து நின்றான். திரு உந்தியில் பிரமனைப் பெற்ற திருமாலின் அமிசமானவன் இராமன் ஆதலின், நான்முகத்தவற்கும் முந்தையான் ஆயினன், உலகியலில் இறந்தோரைப் பற்றி விசாரிக்கும் முறை இதுவாகலின் இங்ஙனம் தாயரை இராமன் விசாரித்தான். 90 |