பரதன் தன் கருத்தை விளக்கி உரைத்தல்  

2471.என்றலும், பதைத்து எழுந்து, கைதொழா
நின்று, தோன்றலை நெடிது நோக்கி, ‘ நீ
அன்றி யாவரே அறத்து உளோர்? அதில்
பின்றுவாய் கொலாம்?’ என்னப் பேசுவான்;

     என்றலும் - என்று இராமன் கேட்டவளவில் (பரதன்); பதைத்து -
துடித்து; எழுந்து -; கை தொழா நின்று - கைகூப்பி வணங்கி;
தோன்றலை நெடிது நோக்கி - இராமனை நெடுநேரம் பார்த்து; நீ
அன்றி
- நீ யல்லாமல்; அறத்து  உளோர்- தருமவழியில் பிறழாமல்
நிற்பார்;  யாவர் - யார் இருக்கிறார்கள்; அதில் - அவ்வறவழியில்;
பின்றுவாய் கொல்’ - நீயும் பின்னிடுவாயோ; என்ன- என்று; பேசுவான்-
மேலும் கூறுவான் ஆயினன்.

     இராமனும் இப்படிக் கேட்டுவிட்டானே என்பது பதைப்புக்கும், நெடிது
நோக்கியமைக்கும் காரணம், அறவழியில் மேற்சொல்ல முடியாமல் பின்தங்கி
விடுதலைப் ‘பின்றுவாய்’ என்றான். ‘கொல்’ ஐயவினா.‘ஆம்’ ‘ஏ’ அசைகள். 97