2479. | ‘முறையும், வாய்மையும், முயலும் நீதியும், அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம் துறையுள் யாவையும், கருதி நூல் விடா இறைவர் ஏவலால் இயைவ காண்டியால். |
முறையும் - நல்லொழுக்கமும்; வாய்மையும் - சத்தியமும்; முயலும் நீதியும் - எல்லோரும் அடைய முயலும் நியாயமும்; அறையும் - சிறப்பித்துச்சொல்லப்பெறும்; மேன்மையோடு - மேன்மையும்; அறனும் - தருமமும்; ஆதிஆம் - இவை முதலாகிய; துறையுள் யாவையும் - அறத்துறையுள் சேர்ந்த எல்லாம்; கருதி நூல் விடா இறைவர்- வேத வழியிற் சிறிதும் பிறழாத அரசர்களது; ஏவலால்-கட்டளையாலே; இயைவ- உண்டாவன என்பதை; காண்டி - அறிவாயாக. இறைவர் கருதிவழி பிறழாதவர் ஆயின் அவர் ஏவுவனவே அறத் துறையாம் ஆதலின் தயரதன் ஏவல்வழி பரதன் அரசாளுவது அறமே என்று பரதனுக்கு இராமன் உணர்த்தினான் 105 |