2487. | ‘மலங்கி வையகம் வருந்தி வைக, நீ, உலம் கொள் தோற் உனக்கு உறுவ செய்தியோ? கலங்குறாவணம் காத்தி போந்து’ எனா, பொலம் குலாவு தாள் பூண்டு, வேண்டினான். |
‘வையகம் - நிலவுலகம்; மலங்கி - வருந்தி நிற்க; நீ-; உலம்கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ? - கற்றூணைப் போன்ற தோள்களை உடைய உனக்குரியதகுதியானவற்றைச் செய்வாயோ?; கலங்குறாவணம் - (உலகம்) கலங்காதபடி; போந்து காத்தி’- வந்து காப்பாற்றுவாயாக; எனா- என்று; பொலம் குலாவு தாள்- பொன் மயமான அழகு விளங்குகிற திருவடிகளை; பூண்டு - பிடித்துக் கொண்டு; வேண்டினான்-. ‘உலம் கொள் தோள்’ உலகைத் துன்பம் நீக்கித் காத்தற்கே அன்றித் தவம்செய்தற்கன்று எனக் குறிப்பால் உணர்த்தினானாம். 113 |