தேவர்கள் கூறுதல் 2504. | அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார், ‘இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல், செவ் வழித்து அன்று நம் செயல்’ என்று எண்ணினார். கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்; |
அவ்வழி - அச்சமயத்தில்; இமையவர் - தேவர்கள்; அறிந்து - உணர்ந்து; கூடினார்- ஒன்று சேர்ந்து ‘இவ்வழி- இப்பொழுது; இராமனை-; இவன் - இந்தப் பரதன்; கொண்டு ஏகு மேல் - உடனழைத்துக்கொண்டு அயோத்திக்குப்போய்விடுவானாயின்; நம் செயல் - (அரக்கரை அழிக்க வேண்டுவதாய) நம் காரியம்; செவ்வழித்து அன்று’ - ஒழுங்குற இயல்வது அன்று; என்று எண்ணினார் - என்றுகருதி; கவ்வையர் - துன்பமுற்று; விசும்பிடை- விண்ணிடத்து; கழறல்மேயினார்- பேசத் தொடங்கினார்கள். அவதார நோக்கம் இராவண வதம் ஆதலின், இராமன் அயோத்திக்குச் சென்றுவிடின் அது இயலாது போகும் என்று’ தேவர்கள் அஞ்சித் தடுக்கக் கூடினர் என்பதாம். கவ்வை - ஆரவாரமும் ஆம். கழறல் - பொருள் புரியாத உரத்த கூச்சலாம். 130 |