பரதன் கருத்திற்கு இராமன் இசைதல் 2508. | என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர் துன்பு இலன்; அவனது துணிவை நோக்கினான் அன்பினன், உருகினன்; ‘அன்னது ஆக’ என்றான்- தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான். |
என்பது - என்ற இச் சொற்களை; சொல்லிய - கூறிய; பரதன்-; யாதும் ஓர் துன்பு இலன் - யாதொரு துன்பமும் இல்லாதவனாக ஆனான்; தன் புகழ் தன்னினும் பெரியதன்மையான் - தனது புகழ் தன்னைவிடப் பெரிதாகப் பெற்ற தன்மையுடைய இராமன்; அவனதுதுணிவை நோக்கினான் - பரதனது உறுதியைப் பார்த்து; அன்பினன் உருகினன் - அன்பினால் உருகி; ‘அன்னது ஆக’ என்றான் - அப்படியே ஆகட்டும் என்று கூறி அதனைஉடன்பட்டான். புகழினும் தான் பெரியவன் எனவும் உரைப்பதுண்டு. 134 |