2514. | நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம் செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான் இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான், அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான். |
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் - இரவும் பகலும் ஓயாமல் அழுதுகொண்டுள்ளநீர் நீங்காத கண்ணை உடையனாய் (பரதன்); நந்தியம் பதியிடை- நந்திக்கிராமத்திடத்தே; நாதன் பாதுகம்- இராமன் திருவடிநிலை; செந்தனிக் கோல் முறைசெலுத்த - செங்கோல் முறையைச் செய்ய; சிந்தையான் - மனத்தினால்; இந்தியங்களை - ஐம்பொறிகளையும்; அவித்து - புலனின்பம் நுகராதவாறு அடக்கி; இருத்தல் மேயினான் - அங்கேயே தங்கியிருத்தலைப் பொருந்தினான். நந்தியம்பதி - அயோத்திக்குப் புறம்பே அண்மையில் உள்ள ஊர். நந்திப் பதி - ‘அம்’சாரியை. 140 |