| 8458. | மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல் வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு சிகரத் தோள்மேல் ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்; அமரர் வாழ்த்தி, வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல். |
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத்தோள் மேல் வீரனும் - அனுமனுடைய அசைந்தொளிரும் இயல்பினவாகிய மலர் மாலையும் மணிகளும் அணிந்த திண்ணிய தோளின் மேல் வீரனாகிய இராமனும்; வாலி சேய் தன் விறல் கெழு சிகரத் தோள்மேல் - வாலி மைந்தன் அங்கதனுடைய வெற்றித் திறன் பொருந்திய மலைச் சிகரத்தை ஒத்த தோளின் மேல்; ஆரியற்கு இளையகோவும் - (இராமன் என்னும்) பெரியோனுக்குத்தம்பியாகிய இலக்குவனும்; ஏறினர் - (போர் மேற்செல்ல) ஏறி அமர்ந்தனர்; அமரர் வாழ்த்தி, வேரி அம்பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல் - (அதுகண்டு) தேவர்கள் (அவ்விருவரையும்) வாழ்த்தித் தேன் நிறைந்த அழகிய மலர் மழையினை இடைவிடாது சொரிந்தார்கள். |