| 9869. | மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும், |
| நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும், |
| வஞ்சன் மேனியை, வார் கணை அட்டிய |
| பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான். |
| |
மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும்- (நிறத்தால்) மேகத்தைத் தோல்வியுறச் செய்த மார்பிலும் தோளிலும்; நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும் - நஞ்சினைத் தோல்வியுறச் செய்த கண்களிலும் நாவிலும்; வஞ்சன் மேனியை- (வேறு பிற உறுப்புக்களிலுமாக) வஞ்சகனான இராவணன் உடம்பினை; வார்கணை அட்டிய-(அம்புகளை விடுத்து) நீண்ட அம்புகள் வைத்திருப்பதற்கேற்ற; பஞ்சரம் எனலாம் வகை பண்ணினான்- கூடு (தூணி) என்று கூறலாம்படி செய்தான். |
பஞ்சரம் - கூடு. இங்கு அம்பறாத் தூணி. இராமனின் அம்புகள் ஆயிரக்கணக்காகப் புறப்பட்டமையால், அவன் முதுகிலிருந்த சிறிய அம்பறாத்தூணி போதாமையால் அவ்வம்புகளை வைக்க இராவணனின் உடம்பை, பெரிய அம்பறாத் தூணியாக்கினான் எனும் நயந்தோன்றக் கூறினார். |
| (166) |