பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 103

பொருளது. பிரிநிலையேகாரம், பிரித்துக் கூட்டப்பட்டது, வில் - வேல் வாள்
முதலிய மற்றை ஆயுதங்கட்கும் உபலக்ஷணம்.  வளம்-நிலவளம் நீர்வளம்
முதலியன.  கைகள் முழங்காலளவும் நீண்டிருத்தல், உத்தமவிலக்கணம். (165)

7.-விராடநகரத்துநிரைகவர்வதன்மூலம் பாண்டவரைப்பற்றி
யறியலாமென்று கர்ணன்கூறுதல்.

வண்டார்விராடன்றன்வளநாடுதண்டான்மலைந்தேதொறுக்
கொண்டாலவன்சூழலிற்சூழும்வினயங்குறிப்போரிருப்பு
உண்டாகினிரைமீளுமின்றாகின்மீளாதென்னுட்கோளிதென்று
எண்டாழுமிதயத்துநிருபற்குஉரைத்தானிரவிமைந்தனே.

      (இ -ள்.) (அதுகேட்டு),-இரவி மைந்தன் - சூரியபுத்திரனாகிய கர்ணன்,-
'வள் தார் விராடன்தன்-வளமான (செங்கழுநீர்) மாலையையுடைய
விராடராசனது, வளம் நாடு - வளப்பம்பொருந்தியநாட்டை, தண்டால் - (நமது)
சேனைகளைக்கொண்டு, மலைந்து-போர்செய்து, தொறு - (அவனது)
பசுக்கூட்டங்களை, கொண்டால்-(நாம்) கவர்ந்து ஓட்டிக்கொண்டு வந்தால்,
அவன் சூழலில் - அவனது நாட்டில், சூழும் வினயம் குறிப்போர் இருப்பு -
பொருந்திய வணக்கத்தைக் காட்டுகின்றவர்களான பாண்டவர்கள் அங்கு
இருத்தல், உண்டு ஆகில்-உள்ளதாகுமானால், நிரை மீளும் - (நாம் கவர்ந்த)
பசுக்கூட்டம் மீட்கப்படும்: இன்று ஆகில் - (அவர்களிருப்பு) இல்லையானால்,
மீளாது - (அது) மீட்கப்படாது; என் உள் கோள் இது - என் மனத்திற்
பொருந்திய எண்ணம் இதுவாகும்,' என்று-,  தாழும் எண் இதயத்து நிருபற்கு
உரைத்தான் - இழிந்த எண்ணங்களுள்ள மனத்தையுடைய
துரியோதனராசனுக்குச் சொன்னான்; (எ - று.)

     மகாபலசாலியாய்ச் சேனைத்தலைவனாயிருந்த கீசகனும் தம்பிமாரோடு
இறந்துபோனதனால், அங்குப் பாண்டவர்களிருந்தாலொழிய நிரை மீளாதென்று,
பாண்டவர்கள் அங்கு இருத்தலையும் இராமையையுங் கண்டுபிடித்தற்கு
உபாயங்கூறினான் கர்ணனென்க.

     தார்க்கு வண்மை - மிக்க வாசனை வீசுதலும், தேன் மழைபொழிதலும்.
சூழும் வினயங்குறிப்போர் - ஆராய்ந்துசெய்யுந்தந்திரத்தைக்
கருதியுள்ளவரெனினுமாம்; இனி, சூழும் வில்நயம் குறிப்போர் எனப்பிரித்து -
வளைந்த வில்லின் வித்தையில் வல்லவர் எனினும்பொருந்தும்.  எண்தாழும்
இதயம் - ஆலோசனையில் அழுந்திக்கிடக்கின்ற மனமுமாம்.  கோள்-
கொள்ளப்பட்டது; எண்ணம்.  இரவி = ரவி.                       (166)

8.-விராடநகரில்தெற்குப்பக்கத்து நிரைகோடல்.

தக்கோர்தகுஞ்சொற்கள்கேளாததுரியோதனன்சொல்லினான்
மிக்கோர்மிலைச்சுஞ்செழுந்தாமவிறல்வெட்சிமிலைதோளினான்