பக்கம் எண் :

118பாரதம்விராட பருவம்

செய்யுளில்'விளைவெலாம் வெங்கனல் கொளுத்தி' என வந்ததனால்,
'கவர்ந்தனர்' என்றது, 'உயிர்கவர்ந்தனர்' என்றவிடத்துப் போல ஒழித்தன
ரென்றவாறாம்.                                              (186)

28.-சுதேஷ்ணை மகளிரைநகர்ப்புறங் காவல்செய்யச்
சொல்லுதல்.

என்றபோதிலப்புதல்வனைப்பரிவுடனீன்றாள்
நின்றமங்கையர்தங்களைநிரைநிரைநோக்கிச்
சென்றகாவலன்வருந்துணைசெங்கையிற்படைகொண்டு
ஒன்றவேகிநம்மெயிற்புறங் காமினென்றுரைத்தாள்.

      (இ -ள்.) என்ற போதில் - என்று (இடையர்) சொன்னபொழுது, - அ
புதல்வனை பரிவுடன் ஈன்றாள் - அவ்வுத்தரகுமாரனை அன்போடு பெற்று
வளர்த்த (விராடன்மனைவியாகிய) சுதேஷ்ணையானவள்,-நிரை நிரை நின்ற
மங்கையர் தங்களை நோக்கி - வரிசைவரிசையாகத் (தனது அருகில்) நின்ற
பரிசனப்பெண்களைப்பார்த்து, 'சென்ற காவலன் வரும் துணை - (நிரை
மீட்டற்குத் தெற்குப்பக்கம்) போன (நமது) அரசன் திரும்பி வந்து சேருமளவும்,
(நீங்கள்), செம் கையில் படைகொண்டு - சிவந்த கைகளிலே ஆயுதங்களை
ஏந்திக்கொண்டு, ஒன்ற-ஒருசேர [கூட்டமாக], ஏகி - போய், நம் எயில் புறம்
காமின் - நமது (நகரத்து) மதிலைச்சுற்றிலும் இருந்து பாதுகாவல்செய்யுங்கள்,'
என்று -, உரைத்தாள் - கட்டளையிட்டாள்;(எ - று.)

     சுதேஷ்ணை வேறுவகையில்லாமையால் மகளிரைக் காக்குமாறு
கூறினாள்:அக்காலத்துமகளிரும் வீரமுள்ளவராயிருந்தமை இதனாற் பெறப்படும்.
(சத்தியபாமை ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தேரூர்ந்தமைமுதலியன
இங்குக்கருதத்தக்கன.) தந்தைக்கு மூத்தமகனிடத்தும் தாய்க்கு
இளையமகனிடத்தும் அன்பு முதிர்ந்திருப்பது இயல்பாதல் தோன்ற,
'அப்புதல்வனைப் பரிவுடனீன்றாள்' என்றார்.  கை சிவந்திருத்தல்,
உத்தமவிலக்கணம்:  இனி சுதேஷ்ணையின் மெய்க்காவலாகப் படைக்கலம்
பிடித்தலாற் சிவந்த கை யெனினுமாம்.                        (187)

29.-இதுவும் அடுத்தகவியும் -குளகம்: உத்தரன் யான்சென்று
பொருது பகைவரைவெல்வே னென்றதைத் தெரிவிக்கும்.

உரைத்தவன்னையைக்கதுமெனவுத்தரன்வணங்கி
நரைத்தவோதிநின்றிருமொழி நன்றெனநகையா
வரைத்தவாரமுமாரமுமாலையுமணிந்தென்
வரைத்தடம்புயம்வளர்த்தது மகளிர்போர்பொரவோ.

மூன்று கவிகள் - ஒருதொடர்.

      (இ -ள்.) உரைத்த அன்னையை - (இவ்வாறுமகளிரைநோக்கிச்) சொன்ன
(தனது) தாயை, உத்தரன்-, கதுமென வணங்கி - விரைவாக நமஸ்கரித்து,
'நரைத்த ஓதி - வெளுத்திருக்கின்ற கூந்தலையுடையவளே! நின் திருமொழி
நன்று - நீ இப்பொழுது சொல்லிய மேன்மையுள்ள வார்த்தை
நன்றாயிருக்கின்றது!' என -