வேறுவடிவுள்ள அருச்சுனன் படைக்கலங்களை யெடுக்கவே, உத்தரன் அவனை வினவி, அவ்வருச்சுனன் மறுமொழிகளில் மீண்டுந்தோன்றிய ஐயத்தைஉத்தரன் வினாவினனென்க. வன்னிமரத்தைக்கடைந்தால் நெருப்புத்தோன்று மாதலால் அது 'எரிப்புறத்தரு' எனப்பட்டது. இனி, புறம் - (நகரத்துக்குப்) புறத்தில் [புறங்காட்டிலேயுள்ள], எரித் தரு - வன்னிமரம், தரு- கொடுத்த என்றுமாம். 'எரி' என்ற வடசொல் - வன்னியென்ற சொல்லைக் குறித்திட, அது - தன்பொருள்களிலொன்றான ஒருவகை மரத்தையுணத்திற்று; இது, லக்ஷிதலக்ஷணை; தரு - வடசொல். கிரீடிய - பலவின்பாற் குறிப்புமுற்று. பெண்தன்மை மிக்கிருத்தலால். 'அரிப்புறத்தடங்கண்ணி' என்றார். அவனும் என்பதற்கு-பிருகந்நளையாகிய அவ்வருச்சுனனும் என்று உரைத்து, அதனை மேல் 45-ஆஞ் செய்யுளில் வரும் 'விடுத்தான்' என்பதற்கு எழுவாயாக்குதலுமொன்று. கிரீடி- கிரீடமுடையவன்; வடசொல்: அதுஈயீறு இகரமாய்க் கிரீடியென நின்றது. பாசுபதாஸ்திரம் பெற்றபின்பு நிவாதகவசகாலகேயவதத்திற்காகத் தேவேந்திரன் அருச்சுனனைத் தன்னுலகத்துக்கு அழைத்துக்கொண்டு போனபொழுது அங்குத் தன் ஆசனத்தில் அருத்தாசனங்கொடுத்து அதில் வீற்றிருக்க வைத்து, முன்புபிரமன் தனக்குத் தந்தருளிய இரத்தினகிரீடத்தைச் சூட்டிட, அம்முடியணியை உரியதாகப் பெற்றனனாதலால், அருச்சுனனுக்குக் கிரீடி யென்று பெயர். (202) 44. | கிரிடியெங்குளனென்றெனைக் கேட்டநீகேண்மோ இருடியாகிநின்றாதையோராசனத்திருக்கும் புருடனிப்பதிபுகுந்தநாள்வந்துடன்புகுந்தோர் அரிடமானதன்விதியினாற்பேடியுமானான். |
இதுவும், அடுத்த கவியும் - ஒரு தொடர். (இ -ள்.) (அருச்சுனன் உத்தரனை நோக்கி),- 'கிரிடி எங்குஉளன் என்று எனை கேட்ட - அருச்சுனன் எங்கே யிருக்கின்றானென்று என்னை வினவிய, நீ-, கேண்மோ - கேட்பாயாக: இருடி ஆகி - முனிவடிவமாய், நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும் - உன்தந்தையான விராடராசன் வீற்றிருக்கின்ற ஆசனத்தில் அவனுடன் எழுந்தருளியிருக்கின்ற, புருடன் - சிறந்த புருஷனான கங்கபட்ட னென்பவன், இ பதி புகுந்த நாள் - இந்த ஊர்க்கு வந்து சேர்ந்த நாளில், (அக்கிரீடி), உடன் வந்து புகுந்து - கூட வந்து சேர்ந்து, அரிடம் ஆன தன் ஓர் விதியினால் - தீமையாகிய தனது ஊழ்வினையொன்றினால், பேடிஉம் ஆனான் - பேடியுருவமாகவுமாயினான்; (எ - று.) பிருகந்நளை அருச்சுனனுடைய செய்தியைக் கூறலாயினாளென்க. கேண்மோ, மோ - முன்னிலையசை. அரிடம் = அரிஷ்டம்: வடசொல். விதியாவது - இருவினைப் பயன் செய்த உயிரைச் |