பெயர்விகுதி. கேஸரியென்னும் வாநரராஜனது மனைவியான அஞ்சநா தேவியினிடத்தில் வாயுபகவானது அநுக்கிரகத்தால் தோன்றியவன் இவன்; இவனிடத்து ருத்திராமிசமும் உண்டு. (217) 59.-உத்தரன் ஸாரதியும், அருச்சுனன்இரதிகனுமாகப் போர்க்கு நிற்றல். உரிய தேரினைமீதுகொண்டுத்தரன்செலுத்தக் கரியமேனியன்செய்யதாமரைத்தடங்கண்ணன் புரியவாங்கியசிலையினனின்றனன்பொலம்பொற் கிரியின்மீதெழுமரகதகிரியெனக்கிளர்ந்தே. |
(இ -ள்.) கரிய மேனியன்-கறுத்த உடம்பின்நிறத்தையுடையவனும், செய்ய தாமரை தட கண்ணன் - செந்தாமரைமலர்போன்ற பெரிய கண்களையுடையவனுமாகிய அருச்சுனன்,-உரிய தேரினை மீதுகொண்டு - தனக்குரிய தேரின்மேல் ஏறிக்கொண்டு,-உத்தரன் செலுத்த - (அத்தேரை) உத்தரன் நடத்தாநிற்க,- பொலம்பொன் கிரியின்மீது எழும் - அழகிய பொன்மயமானதொரு மலையின்மேல் விளங்குகின்ற, மரகதம் கிரி என - பச்சையிரத்தின மயமானதொரு மலைபோல, கிளர்ந்து - விளங்கி,-புரிய வாங்கிய சிலையினன்-நன்றாக வளைத்து நாணேற்றிய வில்லையுடையவனாய், நின்றனன் - (கம்பீரமாக) நின்றான்; (எ - று.) பசுநிரையை மீட்டபின்பும், பகைவர் பொரவர, அருச்சுனன் அவர்களுடன் போர்புரிவதற்குச் சலியாது சித்தனாய் அம்புதொடுத்தெய்யும் நிலைமையில் நின்றா னென்க. பொன்மயமான தேர்க்குப் பொன்மலையும், அதன் மேலுள்ள கருநிறமுடைய அருச்சுனனுக்கு மரகதமலையும்-உவமை. மலர்ச்சியும் குளிர்ச்சியும் சிவப்பும் கண்டோரைமகிழ்வித்தலும் அழகும்பற்றி, கண்களுக்குச் செந்தாமரை மலர் உவமை. புரிய - போர்புரிய வென்றுமாம். மரகதம் - மரதகம்; எழுத்து நிலைமாறுதல்: இலக்கணப்போலி. இரண்டாமடியில் 'கரிய' 'செய்ய' என மாறுபட்ட சொற்கள் வந்தது - தொடைமுரண். மரகதகிரி - வடமொழித்தொடர் ஆதலின், வலிஇயல்பு. (218) 60.-அருச்சுனன் பேடிவடிவொழிந்து நிஜரூபத்தோடு வெளிப்படுதல். படுங்குறும்பனிபுதைத்தலிற்பரிதிதன்னுருவம் ஒடுங்குமாறெனவொளித்ததன்பேட்டுருவொழித்து நெடுங்கொடுங்கணைநிருபன்வெஞ்சேனையின்வேந்தர் நடுங்குமாறுமுன்றோன்றினனரனெனுநாமன். |
(இ - ள்.) நரன் எனும் நாமன் - நரனென்ற பெயரையுடையவனான அருச்சுனன்,-படும் குறும் பனி-(விரைவில்) அழியும் அற்பமாகிய பனி, புதைத்தலின்-மூடுதலினாலே, பரிதிதன் உருவம் - சூரியனது மண்டலம், ஒடுங்கும் ஆறு என - மறையும்விதம்போல, ஒளித்த - (தான்) உருமறைந்திருப்பதற்குக் காரணமான, தன் பேடு |