உரு - தனதுநபும்ஸகரூபத்தை, ஒழித்து-நீக்கி,-நெடுங் கொடுங்கணை நிருபன் - நீண்ட கொடிய அம்புகளையுடைய துரியோதனராசனது, வெம் சேனையின் - கொடிய சேனையிலுள்ள, வேந்தர் - அரசர்கள், நடுங்கும் ஆறு - அஞ்சி நடுங்கும்படி, முன் தோன்றினன் - (அவ்வரசர்களுக்கு) எதிரில் வந்து நின்றான்; (எ - று.) அஜ்ஞாதவாசத்திற் கழிக்கவேண்டிய காலம் கழிந்துவிட்டதனால், அருச்சுனன் நிஜரூபத்தோடு அவ்வரசர்கள்முன்னிலையில் வந்துநின்றன னென்க. படும் - (தனக்குரியபருவத்தில்) உண்டாகின்ற என்றலுமாம். சூரியமண்டலம் - அருச்சுனனுக்கும், குறும்பனி - பேட்டுருவிற்கும் உவமை. கணைக்குக்கொடுமை-கூரியதாய்ப் பகைவர்களைக் கொல்லுந்திறம். நிருபன் - மனிதரைக் காப்பவனென்று பொருள்படும் வடசொல். 'பேடு' என்ற சொல் - ஆணவாய்ப் பெண்ணிழந்த அலியும் பெண்ணவா யாணிழந்த பேடியுமாகிய நபும்ஸகவகை யிரண்டுக்கும் பொதுவாமென்று உணர்க. பேடு + உரு = பேட்டுரு. முன்னொருகாலத்திலே குருசிஷ்யக்கிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் விளக்குதற்பொருட்டு நரனென்றசிஷ்யனும் நாராயணனென்ற குருவுமாகப் பதரிகாச்சிரமத்தில் தோன்றிச் சீடனுக்குக் குரு தத்துவப்பொருள்களை உபதேசிப்பதாக வீற்றிருக்கின்ற திருமாலின் இருமூர்த்திகள்தாமே இங்கு முறையே அருச்சுனனும் கண்ணனுமாக அவதரித்ததனால், அருச்சுனனுக்கு நரனென்று ஒருபெயராயிற்று. (219) 61.-அருச்சுனனதுதுவசத்தில் அனுமன் கூத்தாடுதல். செருச்செய்வான்வருசேனைவெண்டிரையையுங்கடப்பான்; பருச்சிலம்பினின்றுகைதருபாவனைபோல உருச்செழுஞ்சுடரெறிப்பநின்றுலாவினனுண்மைக்கு அருச்சுனன்றடந்தேர்க்கொடியாடையிலனுமன். |
(இ -ள்.) அனுமன் - அநுமான்,- அருச்சுனன் தட தேர் கொடி ஆடையில்-அருச்சுனனுடைய பெரிய தேரினது கொடிச்சீலையில், உண்மைக்கு நின்று - பிரதியட்சமாகப் பொருந்தி,-(முன்பு மகேந்திர மலையின்மேலேறி இலங்கைக்குச் செல்லக் கடலைத் தாண்டியமைபோலவே), செரு செய்வான் வரு சேனை வெள் திரையைஉம் - போர் செய்தற்கு எதிர்த்துவருகின்ற பகைவர்சேனையாகிய வெண்ணிறமான அலைகளையுடைய கடலையும், கடப்பான் - தாண்டுதற்பொருட்டு, பரு சிலம்பின் நின்று - பருத்ததொரு மலைமேல்நின்றும், உகைதரு - உதைந்து எழுகின்ற, பாவனைபோல - தோற்றம்போல,- உரு செழுஞ்சுடர் எறிப்ப - (தனது) உருவம் மிக்கஒளியை வீசும்படி, உலாவினன்-உலாவி விளங்கினான்; (எ - று.) கடலுவமையால் சேனையின்பரப்பும், மலையுவமையால் தேரின் பெருமைவலிமைகளும் விளங்கின. தேர்க்கொடிச்சீலை காற்றில் அசைகின்றபோது அதிலுள்ள வாநரவடிவத்தில் ஆவேசித்துநின்ற |