வந்து போர் இரக்கும் அ கன்னன்மேல் இரதம் ஏவினான் - எதிரில் வந்து யுத்தத்தை வேண்டுகின்ற அந்தக்கர்ணனைக் குறித்துத் (தனது) தேரைச் செலுத்தினான்; (எ-று.) ஒருயாளி யானையை எளிதில் அழிக்கவல்லதாயிருந்தும் அதனை அலட்சியத்தால் விட்டு ஒருபுலியின்மேற் பாய்ந்தாற்போல, அருச்சுனன் துரியோதனனை எளிதிற் கொல்லவல்லனாயிருந்தும் அதுசெய்யாது இகழ்ந்துவிட்டுக் கர்ணனைநோக்கிப் போர்க்குச் சென்றன னென்பதாம். யானை - துரியோதனனுக்கும், புலி - கர்ணனுக்கும், யாளி - அருச்சுனனுக்கும் உவமை. விற்போரில் துரியோதனனினும் கர்ணன் சிறந்தவனென்பது இவ்வுவமையில் தொனிக்கு மெனக் கொள்வர் ஒருசாரார். யாளி-துதிக்கையை யுடையதும் யானையைக்கொல்வதும் சிங்கம்போல்வது மாகிய தொரு மிருக விசேடம்; இது, யாளியானை யெனவும் படும்: இச்சொல் சிங்கமென்ற பொருளில் வழங்குதலு முண்டு. போரிரத்தல்-'நீ என்னுடன் போர்செய்ய வா' என்று அழைத்தல், யாவர்க்கும் கேட்டவற்றையெல்லாங் கொடுக்கின்ற வள்ளலாகிய கர்ணன் அருச்சுனனிடம் வந்து போரையிரந்தன னென ஒருவகைச்சமத்காரம் அமையக் கவி கூறினார். கொடு வரி - ஒரு சொல்: வளைவான உடற்கோடுகளையுடையதென்ற காரணப்பொருள் பற்றிப் புலியைக் குறிக்கும்; பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை, கொடுமை - வளைவு. 'அருச்சுனன் கர்ணன் மேல் இரதம்ஏவினான்' என்றதை, உத்தரனுக்குக் கட்டளையிட்டு அவனைக்கொண்டு செலுத்தின னென்க. (236) 78.-கர்ணன் அருச்சுனன் என்ற இருவரும் கைகலத்தல். இரதமுமிரதமு மெதிர்ந்தபோதிரு குரதுரகதங்களுங் குமுறியார்த்தன உரைதருபாகரு முடன்றுகூவினார் விரைதனுவளைத்தனர் வீரர்தாமுமே. |
(இ-ள்.) இரதம்உம் இரதமும் எதிர்ந்தபோது - (அருச்சுனனது) தேரும் (கர்ணனது) தேரும் ஒன்றையொன்று எதிரிற்சமீபித்து நெருங்கியபொழுது, -இரு குரம் துரகதங்கள்உம்-இரண்டுதேரிலும் பூட்டிய (வலிய) குளம்புகளையுடைய குதிரைகளும், குமுறி ஆர்த்தன-கனைத்து ஆரவாரித்தன; உரைதரு பாகர்உம்-சிறப்பித்துச்சொல்லப்படுகின்ற இரண்டுதேர்ச்சாரதிகளும், உடன்று கூவினார்-பெருங்கோபங்கொண்டு ஆரவாரித்தார்கள்; வீரர்தாம்உம்-இரண்டு வீரர்களும் (கர்ணனும் அருச்சுனனும்), விரை தனு வளைத்தனர் - விரைவாக வில்லைவளைத்தார்கள்; (எ-று.) இரு துரகதம் - இரண்டுபக்கத்துக் குதிரைகள். குர துரகதம்-(ஒற்றைக்) குளம்புகளினால் விரைந்துசெல்வதான குதிரை. விரை-விரைந்து: வினையெச்சவிகாரம்; (போர்செய்தலில்) விரைவுகொண்ட, வில் என்றால், வினைத்தொகையாம். (237) |