பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 159

81.-கர்ணன் மீண்டும் மீண்டும்வந்து பொருது தோற்றோடுதல்.

ஒருவியிட்டோடிமற்றோரொர்தேர்மிசை
மருவியிட்டெதிருறவந்துமோதியும்
உருவியிட்டனகணையொன்றுபோற்பல
வெருவியிட்டனனவன்மீளமீளவே.

      (இ -ள்.) அவன் - அந்தக்கர்ணன்,- ஒருவியிட்டு ஓடி - (போர்) நீங்கி
ஓடிப்போய், மற்று ஓர் ஒர் தேர்மிசை - வேறு ஒவ்வொரு தேரின்மேல்,
மருவியிட்டு - சேர்ந்து [ஏறி], எதிர் உற வந்து மோதிஉம் - (அருச்சுனனுக்கு)
எதிராக வந்து போர்செய்தும், ஒன்று போல் பல கணை உருவியிட்டன - ஓர்
அம்புபோலவே (அருச்சுனனது) பல அம்புகளும் (ஒருதொடையாகத் தனது
உடம்பில்) தைத்துப் புதைந்தோடினவாக, மீள மீள - மறுபடியும் மறுபடியும்,
வெருவியிட்டனன் - அஞ்சிப்போயினான்; (எ - று.)

     கர்ணன் போரினின்று நீங்கியோடி வேறொரு தேரின்மேலேறி மீண்டு
அருச்சுனனெதிரில்வந்து பொருவதும், அருச்சுனனம்புகள் பல தனது உடலில்
தைக்கப்பெற்றவனாய் அஞ்சித்தோற்றோடுவதுமாகப் பலமுறை நிகழ்ந்த தென்க.
'மீள மீள' என்ற அடுக்கு பன்மைப்பொருளது.                     (240)

82.-பலமுறை தேற்றோடியகர்ணனை நோக்கி அசுவத்தாமன்
சில பரிகாசச்சொற்களைக் கூறத் தொடங்குதல்.

இம்முறைவந்துவந்தெதிர்ந்துவெஞ்சமர்
மும்முறைமுறிதலுமுனிவன்மாமகன்
அம்முறைமுதுகிடுமருக்கன்மைந்தனைத்
தெம்முறைமையிற்சிலவார்த்தைசெப்புவான்.

      (இ -ள்.) (கர்ணன்), இ முறை - இவ்வாறு, வெம் சமர் - கொடிய
போரில், வந்து வந்து-, எதிர்ந்து - எதிர்த்து, மும் முறை முறிதலும் -
மூன்றுதரம் தோற்றுப்போனவளவில்,-முனிவன் மாமகன் - துரோணாசாரியனது
சிறந்த குமாரனாகிய அசுவத்தாமன், அ முறை முதுகு இடும் அருக்கன்
மைந்தனை - அவ்வாறு முதுகு காட்டித் தோற்றோடுகின்ற சூரியகுமாரனாகிய
அக்கர்ணனை (நோக்கி), தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான் -
பகைத்தன்மையையுடைய சிலவார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ - று.) -
அவற்றை, அடுத்த இரண்டுகவிகளிற் கூறுகின்றார்.

     துரோணன் மனைவியாகிய கிருபியின் வடிவழகைக் கேள்வியுற்றும்
ஒருகால்கண்டும் மிகக்காமுற்ற சிவபிரானது அருளினாற்
குதிரையினிடமாகப்பிறந்தவன் இவன்; துரோணனாலும், கிருபியினாலும்
வளர்க்கப்பட்டவன்; ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன்.                  (241)