பக்கம் எண் :

170பாரதம்விராட பருவம்

95.- அசுவத்தாமன் எதிர்த்து அருச்சுனனது
வில்நாணியை அறுத்தல்.

தந்தைபோரழிந்துபோனசாபலங்கண்டுவெம்பி
இந்திரன்மதலையோடுமெதிர்த்தனனிவுளித்தாமா
முந்துறவிருவர்வில்லுமுரண்படக்குனித்தபோரின்
அந்தணன்கணையான்மன்னன்வில்லினாணற்றதன்றே.

      (இ -ள்.) இவுளித்தாமா - அசுவத்தாமன்,- தந்தை போர் அழிந்து
போன சாபலம் கண்டு - (தனது) தந்தையான துரோணன் போரில் தோற்று
முதுகிட்டுப் போன நிலையில்லாமையை [நடுக்கத்தை]ப்பார்த்து, வெம்பி -
மனம்வெதும்பி, இந்திரன் மதலையோடு உம் எதிர்த்தனன் - தேவேந்திரனது
குமாரனாகிய அருச்சுனனுடனே எதிர்த்துப் போர்தொடங்கினான்; இருவர்
வில்உம் - இவர்களிரண்டு பேரது விற்களும், முரண் பட - மாறுபாடு
உண்டாக, குனித்த - வளைந்துசெய்த, போரின் - யுத்தத்தில், முந்துற -
முதலிலே, அந்தணன் கணையால் - பிராமணஜாதியனான அசுவத்தாமனது
அம்பினால், மன்னன் வில்லின் நாண் அற்றது - க்ஷத்திரிய ஜாதியனான
அருச்சுனனது வில்லின்நாணியானது அறுபட்டது;

     சாபலம் - சபலத்தன்மை.  வெம்புதல் - கொதித்தல்; கோபக்குறி. 
அசுவம், இவுளி என்பன குதிரையாகிய ஒரு பொருளைக் குறிப்பன வாதலால்,
அசுவத்தாமாவை 'இவுளித்தாமா' என்றார்; இவ்வாறே பரித்தாமா, புரவித்தாமா,
துரகத்தாமா என்றுங் கூறுவர்.  அசுவத்தாமன் என்ற வடமொழிப்பெயர்க்கு -
குதிரையைப் பிறப்பிடமாகவுடையவனென்பது பொருள்; தாமம் - இடம்:
குதிரையின் வயிற்றினின்று பிறந்தவன் இவன்.  வீரரது மாறுபாட்டை அவர்
வில்லின்மேலேற்றி, 'இருவர் வில்லு முரண்படக்குனித்தபோர்' எனப்பட்டது;
இனி 'இருவரும் முரண்படவில்குனித்த போரின்' என்று எடுத்து இரண்டுபேரும்
ஒருவர்க்கொருவர் மாறாகத் தம்தமது வில்லைவளைத்துச்செய்த போரிலென்று
உரைத்தலுமாம்.  இந்த்ரன் - பரமைசுவரியமுடையவ னென்று
அவயவப்பொருள்படும்.  முரண் பட - வலிமை பொருந்த எனினுமாம்.
அன்றே - ஈற்றசை.                                          (254)

96.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தால்
 அசுவத்தாமன் தோற்றல்.

மந்தரமனையதோளான்மற்றொருவரிவில்வாங்கி
இந்தவெம்பகழிக்கெல்லாமீடறானிவனென்றெண்ணிச்
சந்திரமவுலிதந்தசாயகந்தொடுத்தலோடும்
நொந்தினியென்செய்வோமென் றூர்புகநோக்கினானே.

      (இ -ள்.) (உடனே),- மந்தரம் அனைய தோளான் - மந்தரமலை
போன்ற தோள்களையுடையவனான அருச்சுனன், - மற்று ஒரு வரி வில்
வாங்கி - வேறொரு கட்டமைந்த வில்லை (எடுத்து) வளைத்து,