பக்கம் எண் :

180பாரதம்விராட பருவம்

பற்றியுமாம்.  சாந்திரமான வருஷமாவது - அமாவாசைக்கமாவாசை ஒருமாச
மெனக்கொண்டு கணக்கிட்டுச் சந்திரனுடையசம்பந்தத்தால் ஏற்படுத்தும்
வருஷம்; (சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றோரிராசிக்குப்போகுங் காலத்தை
ஒருமாசமெனக்கொண்டு முந்நூற்றறுபத்தைந்து நாள் கணக்கிட்டு ஏற்படுத்தும்
வருஷம் சௌரமான வருஷமென்றும், முந்நூற்றறுபது நாள் கணக்கிட்டு
ஏற்படுத்தும் வருஷம் ஸாவநவருஷமென்றுஞ் சொல்லப்படும்.)
பட்சபாதமில்லாமல் உண்மை கூறியமைபற்றி, 'நெஞ்சினிலழுக்கிலாதான்'
என்றார்; மனத்துக்குக் குற்றம் - தீயசிந்தனை.  பாண்டவர்களை
'இன்னலேயுழந்தோர்' என்று குறித்ததனால், அவர்கள் பக்கல் வீடுமனுக்கு
உள்ள இரக்கம் வெளியாம்.

     செந்நெற்பயிர்கள் கரும்புகள்போலவும் கரும்புகள் பாக்குமரங்கள்
போலவும் வளரும் நீர்நாடு என, அதிசயோக்திவகையால் நீர்வளச்
செழுமையும் நிலவளச்செழுமையுங் கூறியவாறாம்; "கரும்பல்ல நெல்லென்னக்
கமுகல்ல கரும்பென்ன" எனப் பிறர்கூறுமாறுங் காண்க. 'செந்நெலே',
'கன்னலே' என்ற ஏகாரங்கள் - தேற்றத்தோடு இழிவுசிறப்பு.  செந்நெல்-நீர்
வளத்து விளைவதொரு நெற்சாதி.  கன்னல்காட்டுதல் - கரும்பினுருவைத் தான்
கொண்டு காட்டுதல்; கமுகுகாட்டுத லென்பதும் இவ்வாறே; இங்கு 'காட்ட',
'காட்டும்' என்றவை-உவமவாசகமாய் நின்றன.  சேர்ந்து - (நெல்வயலை)
அடுத்து என்றுமாம்.                                          (265)

107.-துரியோதனன் தனது ஊர்க்குச்செல்லுதல்.

அரவினையுயர்த்தகோமானவ்வுரைகேட்டபோழ்தே
பரவையினிரவிகண்டபனிமதிபோலமாழ்கி
வரவரவறிதுமென்றுமாபெருஞ்சேனையோடும்
இரவிடையாருந்துஞ்சவெயில்வளைநகரிபுக்கான்.

      (இ -ள்.) அரவினை உயர்த்த கோமான் - பாம்புக்கொடியை உயர
நாட்டிய துரியோதனராசன், அ உரை கேட்ட போழ்துஏ - அந்த வீடுமன்
வார்த்தையைக் கேட்டவளவிலே, பரவையின் இரவி கண்ட பனி மதிபோல
மாழ்கி - (கீழ்) கடலினின்று உதித்த சூரியனைக் கண்ட குளிர்ந்த
சந்திரன்போல ஒளிமழுங்கி [மனந்தளர்ந்து], வர வர அறிதும் என்று -
'போகப்போகப் பார்த்துக்கொள்வோம்' என்று எண்ணி, மா பெருஞ்
சேனையோடுஉம் - மிகப்பெரிய சேனையுடனே, இரவிடை யார்உம் துஞ்ச -
நடுராத்திரியில் யாவருந் தூங்குகையில், எயில் வளை நகரி புக்கான் -
மதில்கள் சூழ்ந்த (தனது) அஸ்திநாபுரியிற் போய்ச்சேர்ந்தான்; (எ - று.)

      தாம்தோற்று மீள்வதை ஊரவர்கண்டால் இகழ்வரேயென்னும்
நாணத்தினால், அவர்கள் விழித்திருக்கின்ற சமயத்திற் செல்லவிரும்பாமல்,
அவர்களனைவருந் தூங்குகின்ற நள்ளிரவிற்போய்ச் சேர்ந்தன னென்க.
இரவிடை - இடையிரவு: இராப் பொழுதின்நடுவில்;  பாதிராத்திரியி லென்க:
'எயில்வளைநகரி'