பக்கம் எண் :

வெளிப்பாட்டுச் சருக்கம் 221

24.-தருமன் அரசர்களைநோக்கித்துரியோதனன் துராலோசனையால்
தான் அழிந்தமை கூறி, நீவிரே களைக ணெனல்.

பண்ணுக்குருகிப்பறையாலகப்பட்டமான்போல்
மண்ணுக்கிறைவன்மொழிதேறிமகன்செய்வஞ்ச
வெண்ணுக்கழிந்தேனினிச்செய்வதென்யாருநீவிர்
கண்ணுக்கிமைபோலிருந்தீர்களைகண்களாக.

      (இ -ள்.) பண்ணுக்கு - (இனிய) சங்கீதத்தைக் கேட்டலால், உருகி -
மனமுருகி, (உடனே), பறையால் - பறைகொண்டடித்தலால், அகம் பட்ட -
(இருந்த) இடத்தில்தானே யிறந்திட்ட, மான்போல் - (அசுணமென்னும்)
மிருகத்தைப்போல, மண்ணுக்கு இறைவன் - பூமிக்குத் தலைவனாகிய
திருதராட்டிரனுடைய, மொழி - வார்த்தையை, தேறி - நம்பி, மகன் -
அவனுடைய குமாரனான துரியோதனன், செய் - செய்த, வஞ்சம் எண்ணுக்கு -
வஞ்சனையான ஆலோசனைக்கு, அழிந்தேன் - தோற்றுவிட்டேன்; இனிச்
செய்வது என்-? நீவிர் யார்உம் - (நண்பரசரான) நீங்கள்எல்லீரும், கண்ணுக்கு
இமை போல் களைகண்கள் ஆக இருந்தீர் - கண்களை இமைகள்காத்து
இருப்பதுபோல் (எங்களைக்காக்கும்) களைகண்களாக இருந்தீர்கள்; (எ - று.)

     களைகண் - துன்பத்தைப் போக்கும் இடம்: எனவே, ஆதரவாயிருப்பது.
"கண்களைக்காக்கின்ற விமையிற் காத்தனர்" என்ற அடி, இச்செய்யுளின்
ஈற்றிலே காணத்தக்கது.  இசையறிவிலங்காகிய அசுணமென்னுங் குறிஞ்சி
நிலப்பிராணிகளைப் பிடிக்கக்கருதிய அந்நிலத்துமாக்கள் செழுமையுள்ள
மலைச்சாரலிலே நிலாவிளங்கும் மாலைப்பொழுதிலே வேய்ங்குழல்
முதலியவற்றால் இனியஇசையைப்பாட அச்சங்கீதத்தை கேட்டு
ஆனந்தமடையவிரும்பி அந்தப்பிராணிகள் அருகில்வந்து அவ்வின்னிசையைச்
செவியிலேற்றுப் பரவசப்பட்டிருக்கிற சமயத்தில் அக்கொலையாளர்பறைகொட்ட,
அக்கொடிய ஓசையைக் கேட்டவுடன் அப்பிராணிகள் இறந்துபடும் என்பர்: 
அசுணமென்ற இதை மிருகமென்று ஒருசாராரும் பறவையென்று ஒருசாராரும்
கூறுகின்றனர். பண்ணுக்குநல்கிஎன்று பிரதிபேதம்.                    (324)

25.-தருமன் துரியோதனனதுதுராலோசனைச்செயல்களையெல்லாம்
கூறுகையில்,சல்லியன்,துரியோதனன் தன்னையேமாற்றித் தன்
  பக்கத்திற்சேர்த்துக்கொண்டதைத் தெரிவித்துச் செல்லல்.

அரசர்க்கடைவேயவையின்கணவையனைத்தும்
முரசக்கொடியோனயமாகமொழிந்தபோது
விரைதுற்றுதார்ச்சல்லியன்முன்புவிளைந்தவெல்லாம்
பரசுற்றகன்றான்பிழைகொன்றபகடுபோல்வான்.

      (இ -ள்.) அவையின்கண் - சபையிலே, அரசர்க்கு - (விசாரிக்க வந்த
பாஞ்சாலர்முதலிய) ராஜாக்களுக்கு, அடைவே - முறைமையாக, அவை
அனைத்துஉம் - (துரியோதனனுடைய) அந்தத்துராலோசனைச்
செயல்களையெல்லாம், முரசம் கொடியோன் - முரசவாத்தியத்தைக்
கொடியின்கணுடையவனான தருமபுத்திரன், நயம் ஆக - இனிமை