பக்கம் எண் :

நாடுகரந்துறை சருக்கம் 25

     பேரழகினளாகிய திரௌபதியைக் கண்டதும், 'ஒருகால் அரசன்
நம்மையுபேட்சித்து இவளை மணந்துகொண்டுவிடுவானோ?' என்று
சங்கைகொண்டாளென்று முதனூலிற் கூறியிருப்பதற்கு ஏற்ப, 'துண்ணென
வெரீஇயினள்' என்றது.  இனி, 'கந்தருவர் காவல்புரி கற்புடையளானேன்'
என்று கூறியதைக் கேட்கவே, நம்மிடத்து இவள்வசிக்கும்போது,
இவள்கற்புக்குக் கீசகன் முதலியோர் தீங்கிழைக்க முயலாமலிருக்கவேணுமே
என்று கருதித் துண்ணென வெரீஇயினளென்றதெனவுமாம். கந்தருவர்காவல்புரி
கற்புடையேனென்று கீழ்க்கூறியதனால், தெய்வமகளோ எனக்கருதி
வெரீஇயினள் என்பாரு முளர்.                                 (35)

36.-வண்ணமகளாகிய திரௌபதிசுதேஷ்ணையினிடம்
அன்னாட்கு வேண்டியவற்றைச்செய்துகொண்டிருத்தல்.

அன்னையெனுமாறுநெறியானமுறைகூறி
என்னருகிருத்தியெனவெரியின்வருமின்னும்
மின்னனையநுண்ணிடைவிராடபதிதேவிக்கு
எந்நலமுநாடொறுமியற்றினளிருந்தாள்
.

     (இ -ள்.) அன்னை எனும் ஆறு - தாய்என்று கருதுமாறு, (மிக்க
அன்போடு), நெறி ஆன முறை - நீதிக்குஏற்ற முறையுள்ள வார்த்தைகளை?
கூறி - சொல்லி, 'என் அருகு இருத்தி - என்னுடைய சமீபத்தில்தானே
இருப்பாய்,' என - என்று (அந்தச் சுதேஷ்ணை) கூற,-எரியின் வரு மின்உம் -
அக்கினியினின்று தோன்றிய மின்னல்போன்றவளான அந்தத்திரௌபதியும்,
மின்அனைய நுண்இடை விராடபதி தேவிக்கு-மின்னல்போன்ற நுண்ணிய
இடையையுடைய விராடராசனின் மனைவிக்கு, எ நலம் உம் - எப்படிப்பட்ட
[மிகச்சிறந்த] அழகிய கோலத்தையும், நாடொறு உம் - தினந்தோறும்,
இயற்றினள் - செய்தவளாய், இருந்தாள் - வசித்துவந்தாள்; (எ - று.)

     திரௌபதியாகிய வண்ணமகள், சுதேட்டிணைக்கு ஆடை அணிகலன்
கூந்தல்முதலியவற்றை இனியவாகப்புனைந்துகொண்டு வசித்து வந்தன
ளென்பதாம்.  இயற்றினள் - முற்றெச்சம்.                       (36)

37.-பாண்டவர் மச்சநாட்டில்மறைந்து தங்கியிருந்தபோது
அந்நாடு மிகவுஞ்செழித்திருத்தல்.

மைவருதடங்கண்மடமானுமதிமரபோர்
ஐவருமறைந்தனர்களாயுறையுநாளின்
மெய்வருவழாமொழிவிராடபதிதிருநாடு
உய்வருபெருந்திருவொடோங்கியதையன்றே
.

      (இ -ள்.) மை வரு தட கண் மடம் மான்உம் - கருநிறம் பொருந்திய
பெரியகண்களையும் மடப்பத்தையுமுடைய மான்போன்ற