4.-கீசகன் திரௌபதியின்கட்டழகைக் கண்டு ஐயுறுதல். இந்திரன்னகர்ப்பாவைகொலோமடலேந்துபங்கயத்தேவி கொலோவியற், சந்தமாருந்தடவரைத்தையலோ தாரணிக்குள் வருந்தனித் தெய்வமோ, முந்தராவுறைபாதலந்தன்னில்வாழ் மோகினிக்குயிலோ முரல்கின்றிடு, முந்துநீரரமங்கைகொலோவெழி லோவியத்தொளியோ வெனவுன்னினான். |
(இ -ள்.) இந்திரன் நகர் பாவை கொல்ஓ - தேவலோகத்தில் வாழும் அமரமடந்தையோ? மடல் ஏந்து பங்கயம் தேவி கொல்ஓ-இதழ்கள் பொருந்திய தாமரைமலரில் வாழும் இலக்குமியோ? இயல் சந்தம் ஆரும் தட வரை தையல்ஓ-இயற்கையான அழகு பொருந்திய பெரியமலையின் புத்திரியான பார்வதியோ? தாரணிக்குள் வரும் தனி தெய்வம்ஓ-பூமியிலேவந்து மானிடப்பிறவியில்தோன்றிய ஒப்பற்ற பெண் தெய்வமோ? முந்து அரா உறை பாதலந்தன்னில் வாழ் மோகினி குயில்ஓ - முற்பட்ட [சிறந்த] பாம்புகள்வசிக்கும் பாதாள லோகத்திலே வாழ்கின்ற மோகினித்தெய்வத்தினமிசமான பெண்ணோ? முரல்கின்றிடு முந்துநீர் அரமங்கைகொல்ஓ - ஒலிசெய்த வண்ணம் பெருகுகின்ற நீரில் வாழும் அரமகளோ? எழில் ஓவியத்து ஒளிஓ-அழகிய சித்திரப் பதுமையின் ஒளிமயமான வடிவோ? என - என்று (துணிவு பிறவாமல்), உன்னினான் - (பல படியாக அந்தத் திரௌபதியைக் குறித்து) எண்ணினான், (அந்தக்கீசகன்); (எ -று.) இலக்குமியைக்கூறியபின் 'வரைமகள்' என வந்ததனால் பார்வதியோ என்று கூறப்பட்டது. கொலோஎன்று வந்த இடங்களில் இரண்டில் ஒன்று அசையென்க. பாவை, குயில், ஒளிஎன்பன - ஆகுபெயர்கள். (56) 5.-கீசகன் அவளைஅருகிருந்தாரால் இன்னாளென அறிந்து, அவள்காலில்விழுந்து காதலாற் பல கூறுதல். அருகுநின்றமகளிரைமற்றிவளார்கொலென்னவறியான் வினவினான், வரிநெடுங்கண்மகளிருமாதரார் வண்ணமாமகளென்றனர் மையலால், உருகுகின்றவக்காளையுநாணமுற் றொடுங்கிநின்றவுயர் தவப்பாவைதன், இருபதங்களில்வீழ்ந்தெனதாவிநீ யென்றுமீளவுமெத்தனை கூறினான். |
(இ -ள்.) அறியான் - (அந்தத்திரௌபதியை இன்னாளென்று) அறியாதவனான கீசகன், மற்று-பின்பு, அருகுநின்ற - (அங்குச்) சமீபத்திலேயிருந்த, மகளிரை - மாதராரைநோக்கி, 'இவள் ஆர்கொல்-?' என்ன - என்று, வினவினான்-விசாரித்தான்; வரி நெடுங்கண் மகளிர்உம்- செவ்வரிபரந்த நெடியகண்களையுடையரான (வினாவப்பட்ட) மகளிர்களும், மாதரார் வண்ணமாமகள் என்றனர் - (இவள்) மாதரசியான சுதேஷ்ணைக்கு அலங்காரஞ்செய்யும் சிறந்த மகள் என்று தெரிவித்தனர்: மையலால் உருகுகின்ற அ காளைஉம் - காமமயக்கத்தால் மனமுருகுகின்ற அந்த இளவெருதுபோன்றவனான |