நீ சொல்லுகிற வார்த்தையைத் தட்டாமற் செய்யவேண்டுவது பணிப்பெண்ணாகிய எனக்குக் கடமையென்று செய்கிறேன்: ஆனாலும், இதனால் உன்னுடைய தம்பிமார்க்கு நாசமே விளையும்: இதனையறிந்திலை யென்று மேல்விளையப் போவதை ஆராய்ந்து திரௌபதி கூறின ளென்க. ஆரம்-கண்ணீருக்கு, உவமவாகுபெயர். சுதேஷ்ணை 'எனக்குத் தாகமாக இருத்தலாற் பருகுமாறு சுரையை இந்தப்பாத்திரத்தில் வாங்கிவருக' என்று வண்ணமகளை நோக்கிக்கூற, அன்னாள் தடுத்துப்பேச, அந்த இராணி கட்டாயப்படுத்தியனுப்பினாளென்று முதனூலி லுள்ளது. (70) 19.-திரௌபதியைக்கீசகனிடத்துச் சென்று வரும்படியேவிய சுதேட்டிணையைக் குறித்த கவிக்கூற்று. ஆண்டுவந்ததுருபதன்மாமகளடைந்தநாட்டொட்ட மரரொரைவரே, தீண்டலன்றியொருவருமென்னைமெய்தீண்டுவாரிலையென்றென்று செப்பவும், நீண்டசெங்கைத்தரணிபன்காதலிநினைவிலாமனெறியற்ற தம்பிபால், மீண்டுமவ்வழியேகென்றுரைப்பதேவிதியையாவர்விலக்க வல்லார்களே. |
(இ -ள்.) ஆண்டு வந்த-அப்போது வந்த, துருபதன் மா மகள் - துருபதனுடைய சிறந்த மகளாகிய திரௌபதி, அடைந்த நாள் தொட்டு - (தான் விராடன்மனைவியிடம் வண்ணமகளாகிச்) சேர்ந்த நாள்முதல், 'அமரர் ஒர் ஐவர் ஏ தீண்டல் அன்றி - ஐந்துகந்தருவ தேவர்களே (தன்னைத்) தீண்டுவதன்றி, ஒருவர்உம் - வேறொருத்தரும், என்னை-, மெய்தீண்டுவார் இலை-,' என்று என்று செப்பஉம் - என்று பலமுறை சொல்லியிருக்கவும்,- நீண்ட செம் கை - (முழந்தாளளவும்) நீண்டுள்ள செவ்விய கையையுடைய, தரணிபன் காதலி - விராடமன்னவனுடைய மனைவி, நினைவு இலாமல் - ஆலோசனையில்லாமல், நெறிஅற்ற தம்பிபால் - ஒழுக்கங்கெட்ட தம்பியாகிய கீசகனிடத்து, மீண்டும்-மறுபடியும், அ வழி-அவனுள்ள இடத்து, ஏகு - ஏகுவாய், என்றுஉரைப்பதுஏ - என்று (திரௌபதியைநோக்கிச்) சொல்வதா? [இது தகுதியன்று என்றபடி]: விதியை யாவர் விலக்க வல்லார்கள்-? (எ - று.) 'விதியை யாவர் விலக்கவல்லார்கள்' என்ற பொதுப்பொருள் கீழ்க்கூறிய சிறப்புப்பொருளைச் சமர்த்தித்ததனால், இது வேற்றுப்பொருள்வைப்பணி. விதி - திரௌபதி வியாஜமாகக் கீசகன் இறக்க வேணுமென்பது. (71) வேறு 20.-உதயகாலத்தில்திரௌபதி கீசகன் மனையிலேகுதல். மாதவள் கீசகன் மனையிலேகவற் போதக லவுமவன் புலம்பல்போகவும் பாதமில் வன்றிறற் பாகனூர்ந்ததேர் ஆதப னுதயவெற் பணுகினானரோ. |
|