வரங்கொள்வேனின்னையான்மரபுபொன்றுமென்று இரங்குறுமென்னகத்திடரைநீக்குவாய். |
இரண்டுகவிகள் - ஒருதொடர். (இ - ள்.) துரங்கம் ஓர் ஏழ் உடன் - ஏழுகுதிரைகளுடனே, சோதிகூர் - ஒளிமிக்க, ஓர் ஆயிரம் மணி கரங்கள் - அழகிய ஆயிரம் கிரணங்கள், கவின - விளங்கும்படி, தோன்றினாய்-உதித்துள்ளவனே! நின்னை யான் வரம் கொள்வேன்-உன்னிடத்துப் பின்வருமாறு நான் வரம் பெறுவேன் [நீ எனக்கு ஒருவரம் தரவேணு மென்றபடி]: 'மரபு-என்குலத்தின் பெருமை [கற்புநெறி கெடாத்தன்மை], பொன்றும்-(இந்தக் கீசகனால்) அழிவுறுமே!' என்று-, இரங்குறும் - வருந்துகின்ற, என் அகத்து-என்மனத்திலுள்ள, இடரை- துன்பத்தை, நீக்குவாய் - போக்குவாயாக; (எ - று.) சூரியன் தேர்க்குக் குதிரைகள் ஏழ் என்று சிலவிடத்தும், சூரியன் குதிரைகள் ஏழில் ஒன்று ஏழ் [ஸப்த] என்றபெயரினது என்று சிலவிடத்தும் கூறப்பட்டுள்ளது. (74) 23.-சூரியனை வேண்டிநின்றதிரௌபதி கீசகன்முன்னர் மலர்மாலையைக் கொடுத்துவிட்டு நிற்றல். என்றுகொண்டென்றினைப்பணிந்துமன்றலால் கன்றியகீசகக்கலகன்முன்புபோய் மன்றலந்தொடையலும்வழங்கிமெய்வெரீஇ நின்றனளானிலைநின்றகற்பினாள். |
(இ - ள்.) என்று கொண்டு - என்றுசொல்லிக்கொண்டு, என்றினை- சூரியனை, பணிந்து-வணங்கி,- (பின்பு), மன்றலால் - புணர்ச்சி விருப்பினால், கன்றிய-வாடிய, கீசகன் கலகன்-கீசகனென்ற கலகஞ்செய்வானது, முன்பு - முன்னிலையில், போய்-, -மன்றல் அம்தொடையல்உம் வழங்கி - நறுமணமுள்ள அழகிய பூமாலையையுங் கொடுத்துவிட்டு, மெய் வெரீஇ - உடல் நடுக்கங் கொண்டு, நின்றனள்-: (யாவளெனில்)-, நிலை நின்ற கற்பினாள் - உறுதியாகவுள்ள கற்பையுடையவளான திரௌபதி; (எ - று.)
எத்துணைக்கொடியவனாயிருப்பினும் அவன்முன் நிற்கும்போதும் தன் கற்பைக் கெடாது பாதுகாத்துக்கொள்வது என்ற உறுதியுடன் திரௌபதி நின்றன ளென்பார் 'நிலைநின்ற கற்பினாள் நின்றனள்' என்றார். கீசகக்காவலன் என்று பிரதிபேதம். ஆல்-அசை. (75) 24.-அப்போது கீசகன் படுக்கையி லிருந்தநிலை. காமருகுளிரிபைங்கதலிமெல்லடை தாமரைவளையம்வண்டாதறாமலர் ஆமுறையனைத்துமெல்லமளிமேல்விரித்து ஈமவல்லெரியின்மேலென்னவைகினான். |
|