பக்கம் எண் :

70பாரதம்விராட பருவம்

னிடத்து நீ முறையிடவும்  அவன் என்னைக் கேளாமையால் இனிது விளங்கும்:
அன்றியும், என்வலிமைக்கு முன்னே அஞ்சியதனால்தான் உன்மெய்காக்குந்
தேவரும் என்னை இப்போது உபேட்சித்திருக்கின்றன ரென்பதும் நீ ஆராய்ந்து
தெளியலாம்:  இந்நிலையில், இனி உன் எண்ணம் என்னையோ? என்மீது
மனமிரங்குவாய்,' என்று கீசகன் திரௌபதியைக் கைகூப்பித்தொழுதா
னென்பதாம்.  எண் = எண்ணம்: கருவிப்பொருள்விகுதி புணர்ந்துகெட்ட
பெயர்.                                                   (108)
 

57, 58.- இரண்டுகவிகள் ஒருதொடர்:   திரௌபதி கீசகனிடம்
முன்னர் மறுத்தற்குக் காரணங்கூறி இணங்கினாள்போன்றிருத்தலைத்
   தெரிவிக்கும்.

கருத்தினிமுடியுமென்றுகடுங்கனன்முகத்திற்றோன்றுந்
திருத்தகுபாவையந்தத்தீயவன்றன்னைநோக்கி
வருத்தநீயுறவுமுன்னர்மறுத்தனன்மரபினாலும்
சரித்திரத்தாலுங்கொண்டதவவிரதத்தினாலும்,

கந்தருவருமற்றென்னைக்காப்பதுமறந்தார்போலும்
இந்திரனெனினுமாதரெளிமையினொருப்பட்டெய்தார்
புந்தியிலொன்றுங்கொள்ளேலாரிருட்பொழுதிலின்று
சந்தணிகுவவுத்தோளாய்தனித்துநீவருதியென்றாள்.

      (இ -ள்.) (57) கடுங் கனல் முகத்தில் தோன்றும் - கொடிய
அக்கினியின்முகத்திலிருந்து தோன்றிய, திரு தகு பாவை - அழகு
தக்கிருக்கப்பெற்றபதுமைபோன்றவளான திரௌபதி, இனி கருத்து முடியும்
என்று-'இனி (தான்எண்ணிய) எண்ணம் [கீசகவதை] (இனிது) நிறைவேறும்'
என்று நினைத்து,அந்த தீயவன் தன்னை நோக்கி -(பிறன்தாரத்தை
நச்சுதலாகிய) தீயகுணத்தையுடையவனான அந்தக்கீசகனைப் பார்த்து,-'நீ-,
வருத்தம் உறஉம் - (என்னைப்பெறும்பொருட்டு) வருத்தமடையாநிற்கவும்,
மரபினால்உம் - (நான்) பிறந்தகுலத்தினாலும், சரித்திரத்தால்உம் -
(மேற்கொண்ட) நல்லொழுக்கத்தினாலும்,கொண்ட தவவிரதத்தினால்உம் -
மேற்பூண்ட தவவொழுக்கத்தினாலும்,முன்னர் - முன்பு, மறுத்தனன் -
(உன்கருத்திற்கு இசையாது) மறுத்தேன்: (மேலும்) (58) கந்தருவர் உம் - (என்னைக் காவல்புரியும்) கந்தருவர்களும்,என்னை -, காப்பது-
காத்தற்றொழிலை, மறந்தார்போலும்-: (மற்றும்), இந்திரன்
எனின்உம் - (தம்மைக் காதலிப்பவன்) தேவேந்திரனே யானாலும், மாதர் -
மகளிர், எளிமையின் - இலேசில், ஒருப்பட்டு எய்தார் - இசைந்து
வந்துவிடமாட்டார்கள்: (ஆகவே நான் முன்பு மறுத்து உன்னை உபேட்சித்துச்
சொன்னேன்: அங்ஙன் சொன்னதற்காக), புந்தியில் - (உன்) கருத்திலே,
ஒன்றுஉம் கொள்ளேல் - ஒன்றும் வைத்துக்கொள்ளாதே: சந்து அணி குவவு
தோளாய் - சந்தனக்குழம்பை யணிந்த திரண்ட தோள்களையுடையவனே!
இன்று - இன்றைத்தினம், ஆர் இருள் பொழுதில் - நிரம்பிய இருளைக்